ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2019

நண்பரின் உணர்வும் தாயின் உணர்வும் சில சந்தர்ப்பங்களில் நம்மை எப்படி இயக்குகிறது...! என்று தெரிந்து கொள்ளுங்கள்


நண்பர்களாக உள்ள நாம் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் பொழுது நண்பன் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்கு விக்கலாகின்றது.

ஆனால் நண்பர்களுக்குள் பழகி ஒருவருக்கொருவர் மன வருத்தமாகி வேற்றுமையாகிக் கோபத்துடன் ஏசிப் பேசி கடுமையான சொற்களால் அந்த இருவரின் உணர்வுகளும் பட்டுவிட்டால் என்ன ஆகிறது..?

ஒரு சமயம் அதை  நினைவுபடுத்தி
1.நமக்குத் துரோகம் செய்தான் பாவி... அவன் எல்லாம் உருப்படுவானா...?” என்று சொல்லும் பொழுது
2.அங்கே அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

அப்படி வெறுப்படையும் பொழுது நமக்கும் அந்தத் தீமை என்ற உணர்வாகின்றது. நண்பனுக்கும் அந்த நிலை ஆகின்றது. உதாரணமாக அந்தச் சமயத்தில் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார் என்றால்
1.வெறுப்படையும் நிலைகள் கொண்டு பேசினால் சிந்தனை சிதறும்.
2.தன்னை அறியாமல் விபத்துக்களும் உண்டாக்கும்.
3.நீரிலே குளித்துக் கொண்டிருந்தால் பாவி இப்படித் தொந்திரவு செய்தான் என்று எண்ணினால் புரையோடி நீருக்குள் மூழ்கிவிடுவான்.
4.எவ்வளவு திறமை வாய்ந்த நீச்சல்காரராக இருந்தாலும் இப்படி உருவாக்கிவிடுகின்றது.

நம் தாய் தன் பிள்ளையைப் பேரன்புடன் வளர்த்திருக்கின்றது. என் மகன் ரொம்ப தூரம் போயிருக்கின்றான். எப்படி இருக்கின்றானோ... எதுவாக இருக்கின்றானோ...? என்று இந்தத் தாய் தன் மகன் மீது சோர்வடைந்த உணர்வுடன் எண்ணினால்
1.அங்கே ஒரு இயந்திரத்தில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்
2.அந்தத் தொழிலில் சிந்தனை குறைந்து விபத்துக்குள்ளாகும்.
3.இது அன்பினால் வரக்கூடிய தொல்லைகள்.

இதே மாதிரிக் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது என் பையன் இப்பொழுது என்ன செய்கிறானோ...? என்ற இந்த வேதனையுடன் எண்ணினால் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும். இது பாசத்தால் உருவாகிவிடுகின்றது.

ஆகவே பேரன்பு கொண்டு வளர்க்கும் இந்தத் தாய்மார்கள் தன் பிள்ளைகளைப் பற்றி எண்ணும் பொழுது
1.அவன் உயர்வான நிலைகள் பெறவேண்டும்.
2.அவன் தெளிந்த மனம் பெறவேண்டும்
3.சிந்திக்கும் ஆற்றல் பெற்றுத் தெளிவான நிலையில் வாழ வேண்டும்
4.அவன் மகிழ்ந்த உணர்வுடன் வாழ வேண்டும் என்று எண்ணினால்
5.உங்கள் எண்ணம் அந்தக் குழந்தைகளுக்கு நல்லவைகளை ஊட்டும்.

ஏனென்றால் இவை எல்லாம் “நம்மை அறியாமலே” இயக்கக்கூடிய நிலைகள்.

பொதுவாக தாய் எப்பொழுதுமே தன் பிள்ளைகள் நலம் பெறவேண்டும் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகிறது. பிள்ளைகள் தாய்க்குத் தொல்லைகள் கொடுத்தாலும் என் பையன் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அந்தத் தாய் எண்ணுகின்றது.

கருவிலே பத்து மாதமும் தாய் தூக்கிச் சுமந்து பத்து மாதம் கழித்து
1.குழந்தை பிறக்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.
2.குழந்தையை வளர்க்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.

இப்படிப் பலவிதமான இன்னல்கள் பட்டாலும் தன் மக்களை அன்புடன் அரவணைத்து அவர்கள் பண்புடன் வளர வேண்டும் என்று பேரன்பைத்தான் தாய் ஊட்டுகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் தாய் ஊட்டிய அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவுகளாக உண்டு. அதை எண்ணி எடுத்தால் அது நம்மைக் காக்கும்.

1.ஆகவே மனிதர்கள் நாம் அனைவரும் நம் தாயைக் கடவுளாக மதிக்க வேண்டும்.
2.அவர்களைத் தெய்வமாக மதித்தல் வேண்டும். குருவாக மதித்தல் வேண்டும்.

எந்தக் காரியங்களுக்குச் சென்றாலும் அன்னை தந்தையரை எண்ணி
1.அவர்கள் அருளால் என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
2.என் சொல் நல்லதாக இருக்க வேண்டும்.
3.என் செயல் அனைத்தும் போற்றும் தன்மைக்கு வளர வேண்டும்
4.என் தாயின் அருள் உணர்வு என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்று இபப்டி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அதே சமயத்தில் தாய் உடலில் சேர்ந்த எங்களுக்காகப் பட்ட வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கி என் தாய் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.