ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 7, 2019

உடல் பற்றினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி


ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இமயமலையில் வைத்து எனக்கு (ஞானகுரு) அனுபவங்களைக் கொடுத்தார். பனிப்பாறைகளுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொழுது நான் வந்த பாதையில் உள்ள பாறைகள் திடீரென்று இடிந்து விழுந்தது.

இடிந்ததும் நான் எப்படித் திரும்பப் போவது...? என்ற பயம் வந்து விட்டது. என் மனைவி குழந்தைகளின் மீது எண்ணம் வந்து விட்டது.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார். இன்று நீ பத்ரிநாத் கேதார்நாத் எல்லாம் போய்விட்டு வந்தாய். பல நிலைகளை அங்கே நீ தெரிந்து கொண்டாய்.

ஆனால் அந்தத் தெரிந்த உணர்வு கொண்டு வந்தாலும் இங்கே இந்தப் பாறையை கடந்து செல்லப்படும் பொழுது பனிப் பாறைகள் நொறுங்கி விழுந்துவிட்டது.

1.நொறுங்கிய பின் நீ எப்படித் திரும்பப் போவது என்று பயப்படுகின்றாய்.
2.அதனால் உனக்குள் ஒரு புயலே வந்துவிட்டது.
3.தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
4.உன் மனைவியையும் உன் மக்களையும் நீ எண்ணத் தொடங்கி விட்டாய்.
5.பாசத்தால் அப்படி எண்ணும் போது இந்தக் குளிரிலிருந்து உன்னால் தப்ப முடியவில்லை.
6.(ஏனென்றால் குருநாதர் அந்தக் குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக நட்சத்திர உணர்வுகளை என்ன எண்ணச் சொல்லியிருந்தார். அதனால் குளிர் பாதிக்கவில்லை – பாச உணர்வால் மனைவி மக்களை எண்ணியதும் குரு சொன்னதை நான் எண்ண முடியவில்லை)
7.நீயே தப்ப முடியவில்லை என்றால் நீ போய் யாரைக் காப்பாற்றப் போகிறாய் என்று கேட்டார்...!

ஆகவே “மனமே இனியாகிலும் மயங்காதே...
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே...
நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ
நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ...? என்ற பாடலைப் பாடினார்.

நீ இந்த உடல் ஆசையை வைக்காதே. எது நடக்க வேண்டுமோ... அது நடக்கும். ஆனால் தீமைகள் நடக்காது தடுப்பதற்கு... உனக்கு நான் கொடுத்த சக்தி... “அந்தத் துருவ நட்சத்திரத்தை பற்றிச் சொல்லி உள்ளேன்...”

ஒரு சந்தர்ப்பம் நீ விமானத்தில் செல்லப்படும் போது அந்த விமானம் கவிழும் தருணத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அப்பொழுது ஒரு நொடிக்குள் அங்கே நீ செலுத்தினாய்.
1.நீ விமானத்தில் உள்ளோரையும் காத்தாய்... உன்னையும் காத்துக் கொண்டாய்.
2.இது உனக்குள் இருக்கக்கூடிய எண்ண வலு...!

அதே சமயத்தில் எல்லோருமே ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்வோர் தான். அதிலிருந்து யாரும் தப்புவது இல்லை.

1.நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி...
2.பெரிய மகான் என்று மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டு இருந்தாலும் சரி...
3.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்... ஏனென்றால் எதனுடைய அழுத்தம் அதிகமாகிறதோ அப்பொழுது உயிர் இந்த உடலை விட்டுப் பிரியத் தான் செய்யும்.

இந்த உடல் இச்சையை நீ பட்டு “என் மனைவி... என் குழந்தை...!” என்று நீ எண்ணினால் இந்த உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய். இப்பொழுது உன் உயிரான்மா பிரிந்தால்
1.உன் குழந்தையின் ஈர்ப்புக்குள் போவாய்... அல்லது உன்  மனைவியின் ஈர்ப்புக்குள் தான் போக முடியும்.
2.அங்கே சென்ற பின் அந்த குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க விடுவாயா..?

நீ இங்கு இறந்து விடுகின்றாய் என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையோடு இருக்கப்படும் போது இதே உணர்வுகள் அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக ஆக்கி அவர்களையும் நோயாக்கி விடுகின்றாய்.

உன்னை நம்பிய அனைவருக்கும் இதே வேதனைகள் உருவாக்கபட்டு அவர்களையும் துரித நிலையில் மடியும் தன்மையை உருவாக்குகின்றாய். ஆகவே...
1.அந்த வேதனையைத் தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும்.
2.நீ அவர்களைக் காக்க முடியாது.
3.பாசத்தால் நீ எண்ணிய உணர்வுகள் கொண்டு அந்த உணர்வுடன் மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய்
4.அவர்களையும் அழித்து விடுகின்றாய்...!

உடலுக்குப் பின் எந்த வேதனையையும் துயரத்தையும் நீ பட்டாயோ உன் உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும்.
1.இன்று நீ மனிதனாய் இருக்கின்றாய்.
2.அடுத்து நீ எங்கே போகின்றாய் தெரியுமா..? என்று கேட்கின்றார் குருநாதர்.

உன் உடலில் எந்த வேதனைகளை அதிகமாக எடுத்தாயோ அந்த விஷம் (வேதனை என்றாலே விஷம்) என்ற நிலையைத் தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் உன்னை உன் உயிர் அழைத்துச் செல்லும்.  

பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ உன்னை அதற்குத் அங்கே உருவாக்கி விடும் என்று இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்சியாகவே தருகின்றார் குருநாதர்.

ஆனால்...
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகரித்து விட்டால்
2.இந்த மனித உடல் என்ற இச்சையில் இருந்து விடுபட்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலே ஒளியான அணுக்ககளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது.
5.உடலை விட்டு எந்த நேரம் உயிர் பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் அழைத்துச் சென்று
6.உன்னைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும்... நீ அழியா ஒளியின் சரீரம் பெறலாம்...! என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார்.