ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2019

“மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?


இந்த மனித உடல் நமக்கு நீடித்த நாள் இருப்பதில்லை. ஆனால் இந்த உடலை வைத்துத்தான் பிறவியில்லா நிலையை அடையும்  சக்திகளைப் பெற முடியும்.

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்த துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் அவைகள் அழியாது.

அகண்ட உலகில் வருவதைத் தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று அவர்கள் வளர்ந்து கொண்டே உள்ளார்கள். அதைத்தான் “மரணமில்லாப் பெரு வாழ்வு” என்பது.

1.இதைப் போல் மனிதனாகி அதிலே உயர்வு பெற்று
2.ஒளி நிலை பெற்ற தன்மைகள் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உண்டு.
3.இவை அனைத்தும் ஐக்கிய உணர்வாக அங்கே வளரும் தன்மை பெற்று வளர்ந்து கொண்டே உள்ளது.

வான மண்டலத்தில் பார்த்தால் சில பகுதிகளில் ஒளிக் கதிர்களாக மின்னுகின்றது. பல பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது.

அகண்ட (அண்டத்தின்) பாதையில் சுழற்சியின் வேகத்தால் வரும் ஒளி அலைகள் தான் இவையே தவிர இதைப் போன்ற வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது ஒளியின் கதிராக அது வாழும்… வளரும்… அந்த நிலைகளில் சக்தி பெறுகின்றது.

ஆகவே அத்தகைய நிலையை இந்த மனித உடலில் நாம் நினைவிருக்கும் பொழுதே பெறுதல் வேண்டும். நினைவு இழந்து விட்டால் எதனைக் கொண்டு நினைவிழக்கச் செய்கின்றதோ அதன் வழியில் சென்றுவிடும்.

மனிதனின் வாழ்க்கையில் எது அவனை நினைவிழக்கச் செய்கின்றதோ அதை மாற்றிட அருள் சக்திகளைப் பெற்று அருள் வழியில் சிந்தித்தால் அவனும் ஒளியின் தன்மை பெறுவான்.
1.நம் உடல் சதமானது அல்ல…! உயிர் தான் என்றும் சதமானது...!
2.இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நாம் நெருப்பில் விழுந்து விட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. கருகிய நிலையில் வேதனையுடன் இந்த உடலை விட்டு உயிர் பிரியும் போது இந்தத் தசைகளும் உடலில் உள்ள அணுக்களும் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் மட்டும் கருகுவதில்லை.

கருகிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. இந்த உடலில் வாழும் காலத்தில்
1.யார் மேல் பற்று கொண்டு வாழ்ந்ததோ
2.அந்த நட்பான நிலைகளில் அவர்களும் இதைப் பதிவு செய்திருந்தால்
3.அந்த உடலுக்குள் எரிந்தவனின் ஆன்மா சென்று அங்கேயும் எரிகிறதே… எரியுதே..! என்று கத்தும்.. கதறும்…!
4.அவன் மடிந்த நிலைகள் அதே நினைவாற்றல் கொண்டு அங்கேயும் மடியச் செய்யும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற எத்தனையோ நிலைகளிலிருந்து நாம் விடுபட  வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதைப் பெறவேண்டும்..? எவ்வாறு நாம் வாழ்க்கை வழி நடத்த வேண்டும்..? என்று எண்ணுதல் வேண்டும்.

வீடு அழகாகக் கட்டுகின்றோம். தூசி படர்கின்றது. பெருக்கிச் சுத்தப்படுத்துகின்றோம். வீட்டைக் கூட்டிப் பெருக்கவில்லை என்றால் நாம் எவ்வளவு ஆடைகள் அலங்காரமாகப் போட்டிருந்தாலும் தூசி நம் மீது ஒட்டத்தான் செய்யும்.

ஆகவே வீட்டில் அவ்வப்பொழுது வரும் தூசிகளைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்திக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான்…
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு
2.அந்த அசுத்தங்களைத் துடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
3.அருள் ஒளியை நமக்குள் பெருக்கி உடலில் உள்ள தீமைகளைத் தூய்மையாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த உணர்வின் வளர்ச்சி பெறும் பொழுது தான் நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியும். இது முக்கியமானது…!