ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2019

“ஒளியான வித்துக்களைத்தான் மகரிஷிகள் வேண்டுகின்றனர்...!” கூட்டத்தைப் பெருக்க அல்ல...! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.உரைத்துவிடு ஈஸ்வரா...! என்று உரைத்தவனும் கவி மழை பொழிந்தவனும் உண்மையின் சொரூபத்தை உணர்ந்தே
2.நலம் பெற நல்லாக்க நிலையில் “நான்...” என்ற அகங்கார நிலையை விடுத்து
3.சகலமும் ஈஸ்வரர்...! என்ற அருள் ஜோதியைச் சிந்தித்து
4.எல்லா உயிராத்மாக்களையும் தன் உயிர் போல் பாவிக்கும் பாவனையில்
5.மௌனத்தின் உரையில் ஆத்மாவில் உரைக்கட்டும்.
6.அதுவே எமக்குகந்த ஆனந்த நிலை...!

சரீர பக்தி கொண்டு ஆடுகின்ற ஆட்டமெல்லாம் எத்தனை காலத்திற்கப்பா...? ஆண்டாண்டு காலமாகச் சமுதாய அமைப்பில் எத்தனையோ தவசீலர்கள் என்று பறைசாற்றியவர்களைப் பற்றி எத்தனை முறைகள் தான் எடுத்துக் கூறுவது...?
1.உன்னை நம்பு.. பிறரை நம்பாதே...!
2.உன் உயிரான்மா சக்தி பெற்றிட அது... பிறர் கொடுத்துப் பெறுவதல்ல...!

கலியின் சூட்சமமே மனித எண்ணங்களின் விஷமான மூச்சலைகளால் பூமியின் பொக்கிஷங்கள் குறைவுபட்டு விட்டது. இந்தக் கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தன் உயிர் ஆத்ம சக்தியை வலுகூட்டும் முயற்சியைத்தான் யாம் விரும்புகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் நிலைக்கொப்ப அது பக்தியோ வியாபாரமோ அல்லது குடும்ப நலமோ அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப எண்ணம் சொல் செயல் மூன்றிலும் சத்திய நியாய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிலைகளுக்கும்...
1.அவரவர்களுக்கு ஏற்றாற்போல் மெய் ஞானத்தை உரைத்திட்டால் வெறும் திருக்கூட்டம் தான் பெருகும்.
2.யாம் சொல்ல வந்த கல்கியின் வித்துக்களை உருவாக்கிடவும் முடிந்திடாது.

ஏனென்றால் வெறும் கூட்டம் தேவை என்றால் “எத்தனையோ வழிகள் உண்டு...!” (இன்றைய கலியில் கூட்டம் எங்கெங்கே கூடுகிறது என்று பார்க்கலாம்) அது நமக்கு வேண்டியதில்லை.

நமக்கு வேண்டியது...
1.எண்ணத்தில் பிறரைப் பற்றிய தவறான கருத்துக்கள் கொள்ளாது
2.தான் கொண்ட சத்தியத்தில் பிறழாது வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

ஆனால் சத்திய சோதனையில் சோர்வு பட்டவனும் துவேஷக் கருத்துக்களை வைத்துக் கொண்டிருப்பவனும் “சக்தி பெறலாம்...!” என்ற நம்பிக்கையிலாவது வாழட்டும்.

கலி இன்னும் முடிந்திட எண்ணிறந்த காலம் செல்லும் என்று. அறிந்து சொன்னானா எம் உரையை...? உரைத்துவிடு ஈஸ்வரா... என்றவனுக்கே உரைக்கின்றேன் “சடையாண்டி மலையின் சூட்சமத்தை...!”
1.சப்தரிஷிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன...
2.அது பொங்கிடும் நாதமே உரைத்த சூட்சம ஒலி.
3.ஞானம் பெற்றிட விழைவோன் யாராக இருந்தாலும் சமமான உணர்வுகள் கொள்ள வேண்டும்.

இன்னல் கண்டு கலங்காதே...! என்ற வாசகத்தை நினைவில் கொள்க. காலம் குறுகியது என்று பல பல காலம் உரைத்திட்டேன். மெய் ஞானத்தைப் பெறுவது எக்காலம்..?

உலகெங்கிலும் எத்தனையோ எரிமலைகள் வெடிக்கின்றன. அங்குள்ள உயிர்த் தொகைகள் மடிகின்றன. எது எங்கோ நடைபெறும் சம்பவம் என்று நினைக்க வேண்டாம். அது நாம் வாழும் இந்த இடத்தில் ஏன் இருந்திடக் கூடாது.

உண்மையும் அது தான்...! சடையாண்டி மலை என்ற பெயரை வாசிக்கும் பொழுதே அறிந்து கொள்ள வேண்டும். ஞானம் பெற விழைந்தது எதற்கு...? இடத்தையும் உரைக்கின்றேன்.

கொங்கு மண்டலத்தின் தென் திசையில் அமைந்துள்ளது சடையாண்டி மலை. கந்தக மண் சூழ்ந்த அந்த இடத்தில் ஒரு மலை மாத்திரம் அன்று மூன்று மலைகள் அடுப்புகள் கூட்டிய அமைப்பில் அமைவு பெற்று அதில் ஓர் மலையில் இரண்டடி உயரத்தில் மலையின் தாழ்வாரத்தில் மூன்று நீருற்றுக்கள் கிளம்பி ஓடிக் கொண்டே இருக்கின்றன.

தென் கையிலாயம் என்று உரைத்திட்டேன் குரு மலையை. குரு மலையில் இருந்து நாற்பது கல் தொலைவில் தெற்கு திசையில் அடர்வனத்தில் உள்ளது சடையாண்டி மலை.

1.சடையாண்டி மலைகள் குமுறிக் கொந்தளிக்கப் போகின்ற எரிமலைகள்.
2.பயம் காட்டுகின்றேன் என்று எண்ணிட வேண்டாம்.
3.இன்னும் இந்தக் கலியில் உடல் கொண்டு உலவும் சித்தர்கள் அறிந்துள்ளனர் அதனின் சூட்சமத்தை...!

யாம் கூறி வரும் உண்மை நிலைகளை எல்லாம் உணர்ந்து தெளிதல் பொருட்டு இந்தத் தியானத்தின் வழியாக ஒவ்வொரு உயிராத்மாவும் பேரின்பத்தில் திளைத்துப் பேரருள் செல்வத்தில் ஆதி சக்தியில் கலந்திடவே உரைக்கின்றோம்.

மகரிஷிகள் வேண்டுவதோ கல்கியின் வித்துக்களாகிய ஞானச் செல்வங்களைத்தான்...!