ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2019

கடவுள் ஒருவனே...! என்றால் அது எப்படிச் சரியாகும்...?


அடிக்கடி ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தோம் என்றால் அதே குறையான செயல்களைச் செயல்படும் நிலையாக (குறையானவர்களாக) நாமும் மாறுகின்றோம்.

ஒருவர் மற்றொருவரை அடிக்கடி வேதனைப்படும்படி சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால் அவரின் வேதனைப்படும் உணர்வுகள் வேதனைப்படுத்தியவரின் உடலுக்குள் விளைந்து “ஜயோ எனக்கு மேல் வலிக்கிறதே...! கால் வலிக்கிறதே...!” என்பார்

ஆனால் அவர் என்ன நினைப்பார்...? எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன். அவன் தப்பு செய்தான்... அதைத் தானே நான் சொன்னேன்...! என்பார்.

அதாவது தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படியாகப் புண்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வார். அந்த உணர்வின் தன்மை இவர் உடலுக்குள் விளைந்த பின்
1.ஐயோ... மேல் வலிக்கிறதே கை வலிக்கிறதே...!
2.நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்... ஆண்டவன் என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றான் என்று தெரியவில்லையே...! என்பார்.

ஆனால் தெய்வத்திற்குப் பூ மாலைகளைச் சூட்டுவதும் அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் இப்படி எல்லாமே செய்தாலும் பெரும் பகுதி இப்படிப் பிறரைக் குறை கூறிப் பேசும் உணர்வுகள் கொண்டு
1.(முதலிலே) தன்னைத் தான் எண்ணாது
2.அவர் தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்.

ஏனென்றால் நுகர்ந்தது எதுவோ அதை உயிர் அணுவாக மாற்றி... அதை உடலாக மாற்றி.. அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நமக்குள் இயக்கும்....!’ என்பதை மறந்து விட்டனர்.

ஆகவே இதை எதற்குச் சொல்கிறோம் என்றால்
1.இயற்கை எப்படி விளைந்தது...?
2.கடவுள் எப்படி இருக்கின்றான்...? என்பதைத் தெரிந்து கொள்ளத்தான்..!

தனித்து ஒருவன் கடவுள் இல்லை. ஐந்து நிலைகள் சேர்த்துத் தான் கடவுள் ஆகின்றது. வெப்பம்.. காந்தம்.. விஷம்... மணம்... அந்த சத்து... என்ற இந்த ஐந்தும் சேர்ந்த இயக்கத்தின் நிலைகளில் உருவாக்குகின்றது.

கடவுள் ஒருவன் (ஒன்று தான்) என்றால் அது எப்படி நியாயமாகும்...?  ஒரு செடியானாலும் கல்லானாலும் உயிரினங்களாக ஆனாலும் அதே தான்.

ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலைகளில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவது தான் கடவுள் என்றும்
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்த பின் அதை உருவாக்குவது ஈசன்  என்றும்
3.உருவான பிறகு பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா உருவாக்குகிறான் என்றும் ஞானிகள் தெளிவாக்குகின்றனர்.

உயிரின் துடிப்பு ஈசன் என்றாலும்... இயக்கத்திற்குள் இயக்கும் வெப்பம் விஷணு என்றும்... இதற்குள் இணைந்து நுகர்ந்ததை அணுவாக மாற்றுவதை விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும் காரணப் பெயர் வைத்து இயற்கையின் உண்மையின் இயக்கங்களை உணர்த்துகின்றனர்.

நாம் எந்த குணத்தை நுகர்கின்றோமோ அந்த குணத்தின் சக்தியாக உருபெறும் நிலை ஆகி அதே குணத்தின் சக்தியாக அது இயக்கும். அது தன் உடலாக மாறும் போது பார்வதி...!
1.நம் பார்வையில் எதைப் பார்த்தோமோ அதன் உணர்வுகள் எல்லாம் உடலாக இணைந்து கொள்கின்றது.
2.சிவனின் மனைவி பார்வதி - நம் பார்வையில் பார்த்து நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஓ... என்று ஜீவ அணுவாக மாற்றி
3.தன்னுடன் (உடலுடன்) இணைத்துக் கொள்ளும் என்பதற்கு “பார்வதி” என்று காரணப் பெயர் வைத்து
4.நம்மை அறிந்து செயல்படும் சக்தியாக நாம் செயல்பட வேண்டும் என்று நமது காவியங்கள் தெளிவாக்குகின்றது.