ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2019

சுவாச நிலையையும் சரீர சுத்தியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற  வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி... நாபி நாடி... மார்பு நாடி... கண்ட நாடி... சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி... சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி.... ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்... காது... நாசி... வாய்... கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக...
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெறவேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?