ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2019

தாயின் சக்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா...?


குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் போது பம்பாயில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தாயின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அவர் தாயாவது… கத்தரிக்காயாவது…? என் தாய் எனக்குத் துரோகம் செய்கிறது.. அது செய்கிறது... இது செய்கிறது...! என்று சொன்னார். இன்ஜினியரிங் படித்திருக்கின்றார். ஆனால் நான் சொல்வதை எதிர்த்து அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தன் மனைவியின் சொல்லை ஓங்கி வளர்த்துக் கொண்டார். அவருடைய அம்மா தன் மனைவிக்கு மிகவும் தொல்லை கொடுத்தது என்று சொன்னார். ஆகையினால் நான் சொல்வதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

பெரிய வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றைக்கே (சுமார் 40-45) ஆண்டுகளுக்கு முன்) முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவருடைய மனைவியும் குழந்தைளும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவரிடம் சொல்லி விட்டு நான் கல்கத்தா பக்கம் சென்றுவிட்டேன். அவருடைய சந்தர்ப்பம் ஒரு நாள் காட்டுக்குள் போய்க் கொண்டிருந்தார். தன் மனைவியையும் பிள்ளைகளையும் கூட அழைத்துச் சென்றிருந்தார்.

கேமரா வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதிலேயே கவனமாக இருந்து முன்னாடி பார்த்துக் கொண்டிருந்ததில் பின்னாடி யானை வந்ததைக் கவனிக்கவில்லை.

யானை அவரை “லபக்...” என்று தூக்கி விட்டது. தூக்கிய உடனே அதைப் பார்த்த அவருடைய குழந்தையும் அவர் மனைவியும் “அம்மா.......!” என்று சப்தம் போட்டார்கள்.

தன் மனைவியும் குழந்தையும் அம்மா என்று சப்தமிட்டதைக் கேட்டு  இவரும் “அம்மா...” என்று சப்தம் போட்டிருக்கின்றார்.  அந்தச் சப்தங்களைக் கேட்டதும் யானை அவரை அப்படியே வைத்திருக்கிறது.

கொஞ்ச நேரம் வைத்திருந்துவிட்டு அப்படியே அவரைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டது. அவரை அடிக்கவில்லை. “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது...!” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்,

இந்தச் சக்தியின் உண்மையின் நிலையை அவர் உணர்ந்த பிற்பாடு அவர் என்னைத் தேடி வந்தார். காசியில் நான் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் என்னைத் தேடி வந்து சொன்னார்.

என் தாய்க்கு உண்டான சக்தியை யானையிடமிருந்து தப்பிய  அன்றைக்குத் தான் உணர்ந்தேன்... என்று சொன்னார்.
1.இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…? என்றால்
2.இந்த மனித வாழ்க்கையில் “தாயை மறந்தால் மனிதன் இல்லை...!”

ஒரு நாய் நம்மைக் கடிக்க வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அம்மா……! என்று சப்தம் போடுங்கள். அப்படியே அந்த நாய் நிற்கும். உங்களைக் கடிக்காது.

ஆனால் அடி...! என்று சொன்னாலும் கடிக்கும்… முருகா…! என்றாலும் கடிக்கும். அப்பொழுது தாய்க்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் தாயை நாம் எத்தனை பேர் மதிக்கிறோம்…? தாயை மதிப்பது இல்லை.
1.அதே சமயத்தில் நம் பிள்ளையும் தாயையும் மதிப்பதில்லை தந்தையையும் மதிப்பதில்லை.
2.இப்படித்தான் நம் பிள்ளைகளையும் வளர்த்துள்ளோம்…!

நாம் சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது பல சேட்டை செய்கின்றோம். குறும்புத்தனம் எல்லாமே செய்கின்றோம். தாய் என்ன செய்கிறது..?

நம்மைத் வெளியிலே தூக்கி போட்டுவிடுகிறதா... இல்லையே...!” எதையோ சொல்லி அரவணைத்துப் பிள்ளை எத்தனை சேட்டை செய்தாலும் “இந்தாடா கண்ணு... அதைச் சாப்பிடுடா இதைச் சாப்பிடுடா... ஏன்டா இப்படி இருக்கிறாய்...? என்று தான் கெஞ்சிக் கேட்கும்.

ஆனால் வளர்ந்த பின் தாய் ஒரு சொல்லைச் சொன்னது என்றால் “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகிறாய்...!” என்று தாயைப் பேசுகிறவர்கள் தான் நாம் இருக்கிறோம். தாயை மறுக்கும் நிலையே வருகிறது.

ஒரு பித்துப் பிடித்த தாயாக இருந்தாலும் சரி... உன் குழந்தையை அடித்துவிட்டார்கள்..! என்று யாராவது சொல்லட்டும். பிள்ளை மேல் கவனம் இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்றால் உடனே பதறி அழும்.

ஆனால் அதே பித்துப் பிடித்த தாயை இன்னொருவர் அடித்தார் என்றால் “கிரகம்...! அதற்கு அப்படித்தான் வேண்டும்...”  என்று பிள்ளையின் உணர்வுகள் அந்த வழிக்குத்தான் செல்கின்றது. தாயை இணைக்கும் நிலை இல்லை.

1.தாயை இணைக்கும் நிலை வந்து
2.அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில் தாயை எந்த அளவிற்குப் போற்றிது துதிக்கின்றோமோ
3.அந்த உணர்வின் தன்மை என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்

தாயின் உணர்வே நம் உடல். நாம் அம்மா.... என்று எண்ணி ஏங்கினால் நம்மை அந்தத் தாயின் உணர்வுகள் பாதுகாக்கும். ஒரு காரியம் நடக்கவில்லை என்றால்
1.“அம்மா...!” என்று சொல்லி அம்மாவின் அருளைப் பெறுங்கள்
2.மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்
3.உடனடியாக அது நடக்கும்... இதைச் செயல்படுத்திப் பழகுங்கள்

விநாயகரைக் காட்டும் பொழுது ஞானிகள் அதைத்தான் காட்டுகின்றார்கள். தன் தாய் தந்தையை நினைவுபடுத்தி அங்கே வணங்கும்படிச் செய்கின்றார்கள்...?
1.நீ இதை உனக்குள் வினையாக்க வேண்டும்
2.அருள் ஒளியை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்...! என்று தெளிவாக்குகின்றார்கள்.