ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2020

நாளை நடப்பது நல்லதாக இருக்கட்டும் - ஈஸ்வரபட்டர்

எத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல்
1.இன்று அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு
2.காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நிலையே இன்று தொடர்கிறது.
 
ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.
 
1.பத்திரிக்கைகளிலும் சினிமாவிலும் டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில்
2.ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து
3.மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
 
அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள்.
 
ஆக மொத்தம் நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.
 
அதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.
 
1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு
2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்
3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து
4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.