ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2020

நஞ்சைப் பிரிக்கும் சிறுநீரகத்திற்கு (கிட்னி) நாம் செருகேற்ற வேண்டிய துருவ நட்சத்திரத்தின் சக்தி

நமக்கு வேண்டியவர் உடல் நலக் குறைவானால் அந்த நோயாளியை நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றுகிறது.
 
அவனைக் காக்க வேண்டும் என்ற ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.
1.ஆனால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்த பின்
2.நம் உடலுக்குள் அவர் உடலில் விளைந்த நோயின் தன்மை புகாது தடுக்க வேண்டும்.
 
அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவினை ஈஸ்வரா... என்று உயிருடன் ஒன்றி
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி
3.உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்கச் செய்து 
4.உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் நம் கண்ணின் நினைவு கொண்டு உபதேசித்தல் வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லா அணுக்களிலும் உருக் கொண்டு வலுக் கொண்ட பின்
1.இரத்தங்களில் கலந்து வந்தாலும் அந்தத் தீமைகளை ஏற்றுக் கொள்ளாது
2.அதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் சுழலப்படும் பொழுது கிட்னி (சிறுநீரகங்கள்) இந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரப்படும் பொழுது அதைப் பிரித்து விடுகின்றது.
 
ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட அந்த நோயாளியின் உணர்வுகள்... நம் உடல் உறுப்புகளில் கலந்து அங்கே வலுப் பெற்று... நம் கிட்னி விஷத் தன்மை கொண்டு செயலற்றதாக மாறுவதற்கு முன்... 
1.அந்தக் கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.நாம் எடுத்துத் தூய்மைப்படுத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி அங்கே படர்கின்றது.
3.பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மை கொண்டு அதை வெளியேற்றி விடுகின்றது.
 
ஆனால் வேதனைப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் உடலில் அணுக்களாக விளைந்து கிட்னி அந்த விஷத்தைக் கண்ட பின் அதைச் சிறுநீராகச் சரியாகப் பிரிக்காதபடி... இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்ற உறுப்புகளிலும் சேர்கின்றது.
 
அந்த விஷங்களை வடிக்கத் தவறினால் நமக்குள் கடும் நோயின் தன்மை உருவாகி மடியும் தன்மையே வருகின்றது.
 
ஆகவே நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்...? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.
 
நான் (ஞானகுரு) சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம். இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ கடுமையான வேதனைகளை அனுபவித்தேன்.
1.வேதனையான உணர்வுகள் எப்படி வருகிறது…? என்று உணரும்படிச் செய்தார் குருநாதர்.
2.அந்த வேதனை தாக்கப்படும் பொழுது அதை எவ்வாறு நீ மாற்ற வேண்டும்…?
3.இதற்கு நீ என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்...? என்று தெளிவாக்கினார்.
 
அதனின் உணர்வு கொண்ட வித்தினை உருவாக்கித் தான் “ஞான வித்தாக” உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்கள் கிட்னிக்குள் வலு சேர்க்கப்படும் பொழுது நஞ்சான உணர்வுகளை நீக்கிடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
 
வாழ்க்கையில் தீமை என்ற உணர்வு வரும் பொழுதெல்லாம்...
1.உங்கள் எண்ணத்தால் அதை அகற்றிடும் வலிமை
2.நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிக்கின்றோம்.