ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2020

பயமான உணர்வுகளைப் போக்கி மன பலம் பெறும் வழி முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மன நிலையில் பயந்தவர்கள் தன் நிலையை மறந்துவிடுகின்றனர். எதைப் பார்த்தாலும் அந்தப் பயந்த நிலை அடைந்து அதனால் உடல் நிலையும் மன நிலையும் கெடும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.
 
ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்று மண்டலத்தில் எண்ணிலடங்காத நிலைகள் கொண்ட பல உயிரணுக்களும் நல்ல அணுக்கள்... தீமையான அணுக்கள்.. பல ஆவி நிலைகள்... என்று இப்படிப் பல சுற்றிக் கொண்டுள்ளன.
 
இந்தக் காற்று மண்டலத்தில் தான் ஈரப்பசையும் உள்ளது. மேகங்கள் படிந்துள்ளதும் இந்தக் காற்று மண்டலத்தில் தான் உள்ளது.
1.இந்தக் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள காற்றில் ஈரப்பசையில்லை
2.அந்த நிலையில் ஓரே சமமான நிலை தான் உண்டு,
 
காற்று மண்டலத்தில் உள்ள மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அந்த நிலையில் அலைந்து கொண்டுள்ள பல ஆவிகள் அதனுடைய செயலைச் செயல்படுத்த முற்படுகின்றன.
1.அத்தகைய ஆவிகள் எந்த உடலை ஏற்கலாம்...? என்ற நிலையில்
2.இடிக்கும்... மழைக்கும்... இருட்டிற்கும்.. பயந்த நிலையில் உள்ளவர்களை
3.அந்தத் துர் ஆவிகள் வந்து அண்டிக் கொள்கிறது.
4.இந்த நிலையில் நம்மை அறியாமலேயே நாம் நம்மை அந்த ஆவியின் நிலைக்குச் செல்லும் தன்மை வந்துவிடுகின்றது.
 
அப்பொழுது பயம் கொண்ட நிலையில் உள்ளவனுக்குத் தன் எண்ண நிலை அற்றுப் போகிறது. எண்ண நிலை இல்லாததினால் செயல் திறன் மங்கி விடுகின்றது.
 
சோர்வுத் தன்மைக்கு அடிபணியும் தன்மை வந்து மன நிலை மாறுபட்டு உடல் நிலை கெட்டு தன் வாழ்க்கை நிலையே பெரும் சஞ்சலத்தில் செல்லும் நிலைக்குச் செல்வதெல்லாம் “மன நிலையில் தான்...!”
 
ஒவ்வொரு மனிதருக்கும்...
1.அவரவர் எடுக்கும் சுவாச நிலையும் மன நிலையும் பொறுத்துத்தான்
2.அவர்கள் வாழ்க்கை முறையும் உடல் நிலையும் செல்வ நிலையும் சந்தோஷ நிலையும் சோர்வு நிலை பெறுவதும் எல்லாமே…!
 
சூரியனின் சக்தியிலிருந்து சகல சக்தியும் இந்த உலகினிலே சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நமக்கு அவன் அளித்த சக்தியைக் கொண்டு நம் சக்திக்குகந்த நல்ல அணுக்களையும் மகரிஷிகளின் ஆசியைப் பெறும் தன்மையில் நாம் நம் ஆத்ம ஜெபத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
 
ஆத்மீக வழியில்...
1.நல் வழி ஒன்றிலேயே நாட்டம் கொண்டு ஜெபிக்கும் பொழுது
2.நல் ஆத்மாக்களின் நல் உறவை நாம் பெற்று நல் மனத்துடன் நாம் இருந்தால்
3.நம்மை எந்தத் தீய சக்திகளும் தீய ஆவிகளும் தீண்டும் தன்மையை அகற்றும் நிலை நமக்கு வந்தடையும்.
 
நம் எண்ணத்தில் அச்சக்தியின் ஒரே சக்தி நிலை மட்டும் சத்திய நிலையில் இருந்து விட்டால் பயம் அச்சம் என்ற நிலையெல்லாம் வந்து அண்டாது.
 
நம்மை நாமே பரிசுத்தப்படுத்துவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தியானம் ஒன்று தான் சகல வித்தையும்...! சகல மந்திரமும்...! மந்திரம்...மாயம்...! எல்லாமே...!
1.அச்சக்தி நிலை பெற்ற சத்தியவானுக்குச் சகல நிலைகளும் தானாக நடந்துவிடும்.
2.எந்த நிலையிலும் சலிப்பிற்கும் சங்கடத்திற்கும் ஆளாகாமல் ஜெப நிலை பெறுங்கள்...! என்பது இந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான்,