ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2020

சுவாசம் உயர்ந்ததாக இருந்தால் தான் மோட்சத்தை அடைய முடியும் என்று மகாபாரதம் காட்டுகின்றது

மனிதனின் உணர்வின் இயக்கங்களைப் பார்த்தோம் என்றால் அவன் அப்படிச் செய்கின்றான்… நான் இப்படிச் செய்கின்றேன்…! என்ற நிலைகளில்
1.நான் தான் செய்தேன்…
2.நான் செய்து கொண்டிருக்கின்றேன்…
3.என்னால் தான் முடியும்…
4.இது அனைத்தையும் நான் செய்தேன்…! என்று பலருக்குப் பல உபகாரம் செய்வார்கள்.
 
இப்படிப் பல உபகாரம் செய்தவர்களின் உணர்வுகள் “நான்… என்ற உணர்வு வரப்படும்போது இங்கே கௌரவர்கள் ஆகின்றது.
 
அதே சமயத்தில் சிறிது குறைவானால் “அன்றைக்குச் செய்தேன்… பார்… இன்று என்னை மதிக்கின்றானா பார்…! என்று இந்தக் கௌரவ போர் வருகின்றது 
 
தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் போது அவர்களைப் பார்த்தவுடனே குருக்ஷேத்திரப் போர். அதை மீறி உடலுக்குள் போனவுடன் மகாபாரதப்போர் ஆகிறது.
 
கௌரவம் என்ற நிலைகள் கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மை புலனறிவு ஐந்து வழியாக உள்ளுக்குள் செல்லும்பொழுது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்.
 
போர் என்று உடலுக்குள் வரப்படும்போது நமக்குள் இருக்கும் பல அணுக்களுக்குள் மகாபாரதப்போராக மாறுகின்றது. கலக்கமும் பல நிலைகளும் மற்ற நிலைகளும் இரத்தத்திற்குள் நடக்கும் போது மகா போராக இது உடலுக்குள் நடக்கின்றது.
 
ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களின் உணர்வின் நிலைகளையும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பின் உணர்வை சந்தர்ப்பத்தில் எடுத்து வைத்திருக்கின்றோம்.
 
அப்பொழுது நாம் நல்லது என்று எண்ணப்படும் பொழுது அதனுடைய நிலைகளை கௌரவர்கள் விடுவதில்லை.
 
ஒவ்வொரு நாளும் இதைப் போல் நமக்குள் கௌரவப் போர் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்க்கலாம்.
1.என் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
2.மனைவி நல்லது சொன்னால்… மனைவி சொல்வதை நான் கேட்பதா…?
3.மனைவி தப்பு செய்து விட்டால் கணவருக்குத் தெரிந்தால் திருப்பிப் பேசுவார் என்று கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
4.குழந்தை ஒரு தப்பு செய்து விட்டால் அப்பா திட்டுவார் என்றால் இல்லவே இல்லை பொய் சொல்லும்.
5.அதே சமயத்தில் நாம் நல்லவன் என்று பெயர் எடுத்திருப்போம். சந்தர்ப்பத்தில்  அறியாமல் தப்பு செய்திருப்போம். கேட்டால் “இல்லவே இல்லை… என்போம்.
 
ஆக… தவறை மறக்கும்போது இத்தகைய கௌரவப் பிரச்னை வருகிறது. ஏனென்றால் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை மூடி மறைக்க என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.
 
ஆனால் இது போன்ற உணர்வின் தன்மை வரும்போது கடைசியில் இந்த வேதனை என்ற உணர்வுகள் வரும். இருளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது. வேதனை என்ற போர் முறைகள் வருகின்றது.
 
கடைசியில் அடிக்கடி வேதனை என்று நம்முடைய எண்ணங்கள் வரும் பொழுது
1.கண்ணும் (கண்கள் - கண்ணன்) பார்வையை இழக்கின்றது.
2.அர்ஜூனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகள் சோர்வடைகின்றது
3.நமக்குள் வலுவான உணர்வுகள் பீமன் என்ற நிலைகள் அழிகின்றது… தாக்க முடியவில்லை.
 
மகாபாரதப்போர் முடிவில் கண்களை இழந்தபின் அர்ஜூனனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே திருடிக் கொண்டு போகின்றார்கள். அவனால் தடுக்க முடியவில்லை.
 
கண் பார்வை (கண்ணன்) இழந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பிரித்து காட்டித் தெளிவாக்குகின்றார்கள்.
 
அர்ஜூனன் எல்லாவற்றையும் செய்தேன் என்பான். கண்கள் இழந்தபின் என்ன செய்ய முடியும்…? கண் இழந்தபின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்கள்.
 
கடைசியில் தர்மன் என்ன செய்கின்றான்….?
 
இது எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்…
1.மோப்பத்தில் அறிந்து கொண்ட உணர்வுகள்தான் எனக்கு எல்லா வகையிலும் வழி காட்டியது
2.நன்மை தீமை என்று எனக்கு அறியச் செய்தது
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அதன் வழியில் தான் எடுத்தேன்…! என்று தர்மன் சொல்வதாகக் காட்டுகின்றனர்.
 
அவன் யாருக்கு மோட்சத்தைக் கேட்டான்… என்றால் முதலில் தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு என்று தான் கேட்டான். நாம் சுவாசித்த (நுகரும் சக்தி – மோப்பம்) உணர்வின் தன்மைதான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
 
1.தீமை நீக்கும் உணர்வு தான் (சுவாசம்) எனக்கு வழிகாட்டியாக வருகின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைக்கு… “அதற்கே அந்த ஒளியாகும் தன்மை வேண்டும்… என்று
3.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.
 
யாராவது இதைப் பற்றிச் சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…! எவ்வளவு பெரிய பேருண்மையைக் காட்டியுள்ளார்கள்.
 
குருக்ஷேத்திரப் போர் நடப்பதும் கௌரவப்போர் உள்ளுக்குள் நடப்பதும் மேல் வலிகின்றது தலை வலிக்கின்றது என்று உடலுக்குள் நடப்பதைக் காட்டி வெளியிலே ஒருவருக்கொருவர் கௌரவப் போர் வந்தாலும் எல்லாம் ஒன்றாக உள்ளுக்குள் நடக்கும்போது மகாபாரதப்போர் என்று வருகின்றது.
 
நமது கண்களால் எடுத்துக் கொண்ட உணர்வு எண்ணங்களாக உருவாகி அந்த எண்ணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள் நமக்குள் போர் முறைகளாக எப்படி வருகின்றது…?

உணர்வின் இயக்கம் எந்த நிலையில் இருக்கின்றது…? என்று மகாபாரதப்போர் நம் உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்ற நிலைகளையும் மகாபாரதப் போர் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள் ஞானியர்.