ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2020

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகிச் செல்லும் எந்தச் சந்நியாசியாக இருந்தாலும் ரிஷித் தன்மை பெற முடியாது - ஈஸ்வரபட்டர்

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்தி...
1.குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்
2.இன்னும் ஒரு சாரார் அப்பக்தியைப் பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்
3.இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும் 
4.அவ்வாண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு
5.மடாலயம் கட்டி மத குருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.
 
எல்லா மதத்திலும் இந்த நிலைதான்...! உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன.
 
இதிலிருந்தெல்லாம் நமது ஆத்மாவை எல்லாமில் எல்லாமாய் அவனருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே எல்லாவற்றுடனும் எல்லாமாய்த்தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
1.அழுக்குப்படிகிறதே...! என்று அஞ்சி ஒதுங்கி விடலாகாது...
2.அழுக்கை அகற்றிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
 
மண்ணிலிருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் இதையா நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்...!
 
அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.
 
அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளதென்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா...?
 
மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்கலாகாது.
 
ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப் போல் உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.
 
வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள்தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.
 
1.குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி
2.இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபமிருக்கும் எந்த ஆத்மாவானாலும் சரி
3.அவ்வாத்மாவும் உடலை விட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
4.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்த நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகின்றேன்.
 
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் நம் எண்ணமுடன் சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்துதான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.
 
ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல்லுணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாய் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்த வேண்டும்.
 
இதை உணர்ந்து கொண்டு...
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழி முறை பெற்று 
3.எல்லாமே ஒளிரச் செய்யல் வேண்டும்.