ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2020

பேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு

நம் பூமியில் பரிணாம வளர்ச்சியில் மனிதனானவர்கள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிவிட்டு ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
அவர்களின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாமும் அந்த எல்லையைச் சென்றடையலாம்.
 
ஆக… தீமைகளை வென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்தால்
1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாமும் வென்று
2.என்றும் ஒளியாக அந்த மகரிஷிகள் வாழ்வது போல் பிறவியில்லா பெரு நிலைகள் அடையலாம்.
 
இதைத் தான் வேகா நிலை என்பது...!
 
மாறாக… இந்த வாழ்க்கையில் பந்தம் பாசம் என்ற நிலைகள் வந்து விட்டாலோ… நம்முடைய பார்வையில் பிறர் செய்யும் தீமைகளை அதிகமாக எண்ணி அந்தத் தீமையின் பற்று வளர்ந்து விட்டாலோ… நாம் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.
 
அதை எல்லாம் விடுத்துவிட்டு அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மை நாம் நினைவு கொண்டால் இந்த மனித உடலிலிருந்தே அந்தச் சொர்க்க பூமியான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ முடியும்.
 
1.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வுகளும் ஒன்றாகி
2.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளி உணர்வுகளாக மாற்றி
3.அழியா ஒளிச் சரீரம் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்திட முடியும்.
 
இந்தப் பிரபஞ்சம் முழுமையாக அழிந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் அழிவதில்லை.
 
இதைப் போல் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் உண்டு. அதில் விளைந்த மனிதர்களும்  இதைப் போல் விண் சென்றவர்கள் பேரண்டத்தில் வெளி வந்த பின் அவர்கள் ஐக்கிய உணர்வு கொண்டு இந்த ஒளியின் சரீரமாக வாழ்கின்றார்கள்.
 
அதன் வழியில் பிறவியில்லா பெரு நிலை பெற்று இந்தப் பேரண்டமே ஒளிமயமாகும். அந்த நிலை அடையப் பல கோடி ஆண்டுகளாகும்.
 
ஆகவே… பேரண்டம் என்பது அகண்ட நிலைகள் பெற்றது. மனிதனான பின் நாம் நுகரும் உணர்வின் தன்மையை ஒளியாக்கி விட்டால் நமக்கு என்றும் அழிவில்லை.
 
அந்த அழியாத நிலைகள் பெறுவதற்குத் தான் இங்கே உணர்த்துகின்றோம். நாம் அனைவரும் அந்த வேகா நிலை பெறுவோம். 
 
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய் உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து… நமக்குள் வரும் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற நாம் தியானிப்போம்.
1.நமக்குள் தீமைகள் புகாது தடுப்போம்.
2.நாம் பார்ப்போருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்.