ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2020

நாம் ஞானத்தின் சக்தி பெறுவது என்பது ஆத்மாவிற்குத் தான்... செல்வத்திற்கும் புகழுக்கும் அல்ல...! - ஈஸ்வரபட்டர்

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்திச் செயல் கொண்டு நாம் அந்த ஞானம் பெறுவது என்பது நம் ஆத்மாவிற்குத்தான்...!
1.நம் எண்ண்ம் செயல் எல்லாமே... “நமக்குச் சாதகமாக”
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.
 
நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம். மற்றவர்களுக்கு அந்த நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந்த “நான்” என்ற நிலை வந்து விடுகின்றது.
 
நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன் நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.
 
நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா...?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப் படுத்திக் கொள்கின்றோம்.
 
புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா...?
 
அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.
 
1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.
 
நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.
 
1.நான்... எனது... என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனை பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி அந்த நிலை அந்த நானாகிவிடுகின்றது.
 
பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்... மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.
 
 இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்... அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது...!”
 
பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்...? என்ற வினா எழும்பலாம்.
 
பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்... உண்மைதான்.
 
ஆனால்... அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.
 
தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்...!
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.