ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2020

ஒரு நிலை கொண்ட தியானத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம்.
1.எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய்ப் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.
 
உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும். அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது.
1.எல்லா உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட்டு தியானத்தில் உள்ள நிலையில்
2.இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.     
3.அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டு விடுகின்றது.
 
ஒரு நிலை கொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எத்தகைய அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.
 
உடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்… அமரலாம்… உறங்கலாம்… நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம்…! உடலில் பின்னப்படாவண்ணம் எச் செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.
 
இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.உயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.உயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான் நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.
 
எந்த வகையான மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும். 
 
நம்மை எதிர் நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.
 
தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின்… அவர்கள் இல்லத்தையும் அவர்களின் உடலையும் அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும் எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய் செயல் கொண்டிடும்.
 
1.எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால்
2.நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.
 
இன்றைய கால நிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ்வுலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்த… ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி… இன்றைய அரசியலும் சரி… ஆலயங்களும் சரி… “பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது…”
 
இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில் இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன் அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவை செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது.
 
தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.
 
இன்னும் இந்திய நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து “உண்மை வழி…” என்ற போர்வையில் வாழுகின்றனர்.
 
இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலைத்தொட்டே வந்து கொண்டுள்ளது.
 
ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டு பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டை இட்டு போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.
1.அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு வழி வழியாய்
2.எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.
 
எவ்வுயிரணுவும்தான் அழிவதில்லையே…!
 
ஆக… இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலைகொண்ட ஜெப சக்தியில்
2.சலிப்பு கோபம் குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
3.நமது ஆத்மாவை ஒரு நிலைகொண்ட தியானம் ஒன்றினால் மட்டும்தான் நல் வழி கொண்டிட முடியுமப்பா…!