ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2020

முன் ஜென்ம வாழ்க்கை என்று ஒன்று உண்டா…? - ஈஸ்வரபட்டர்

இவ்வுலகில் சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று “வயதுக்கு மீறிய செயல்கள் செய்கிறது...” என்றால் அது எந்த நிலையில்…?
 
அவ்வாத்மாவின் ஒளி அலைகள்…
1.அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து
2.அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து…
3.மறு ஜென்மத்திற்கு வரும் பொழுது தான் இத்தகைய நிகழ்வுகள் வருகிறது.
 
ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன… பல ஆவிகளும் உடலில் ஏறிக் கொண்டுள்ளன…! என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளோம்.
 
அந்த மகானானவர் அவர் வாழ்ந்து ஞானம் பெற்று சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால் அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.
 
மகான் உடலைவிட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம் மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால் அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெறுகிறது.
 
அடுத்து மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்…
1.அந்த மகானுடன் (மகான் உடலில்) ஒன்றியதினால்
2.அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன் இச்சிசு பிறப்பில் வாழும் பொழுது
3.அம்மகானின் சக்தி அலை இச்சிசுவின் மேல் பாய்ந்து பல அபூர்வ நிலையெல்லாம்
4.வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகின்றது.
 
திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில்தான்.
 
இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்று செயல்பட்டால் மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்.
 
பெற்ற பயனைப் பொருளாக்கும்… புகழுக்கும்… விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றிவிடுகின்றது.
 
திருவையாறு தியாகராஜரின் நிலை இந்த நிலையில் வந்தது தான்…!
 
அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டு தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதறவிடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.
 
இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…,? என்ற வினா எழும்பலாம்.
 
இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும்…
1.இவர் தான் என் தாய்… இவர் தான் என் தந்தை...! என்று சொந்தபந்தங்கள் உணர்த்தியும்
2.தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்தபந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புக்களையும்
3.மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்கள்.
 
இது எல்லாம் எந்த நிலையில்…?
 
ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.
 
எந்தப் பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால் அந்த அந்தந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.
 
உடலில் ஏறிய எந்த ஆத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.
 
“ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது…”
1.அந்த உடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும்
2.சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால்தான் சிலர் (சில உடல் ஆத்மாக்கள்)
3.தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
4.ஆவி ஆத்மாவின் செயலிலேயே வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.
 
இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை. அகால மரணம் எய்துகின்றனர்… தன் நிலை மறந்து…!
 
அந்த நிலையிலேயே அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும்… உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும்… பிரிந்து செல்கின்றது.
 
ஆனால் அந் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்குத் தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால்…
1.தன் முந்தைய நிலையும் மறந்து
2.எந்த உடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ் உடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
3.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றிவிடுகின்றது.
 
பொதுவாக… உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆத்மாவானாலும் சரி உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையர் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.
 
அப்படி இருக்க… இந்தக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள்தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார்…! என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துகிறது என்றால்
1.இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலைகொண்டு
2.இரண்டு நிலையென்பது அதன் முன் ஜென்ம நிலையும் ஆவியாக மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு கர்ப்பத்திற்கு வந்தவுடன்
3.இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
4.மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
5.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால்
6.எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே
7.அதன் பேசி உறவாடும் கால கட்டத்தில்
8.அவை ஏறிய உடலாத்மாவின் சொந்த பந்தங்கள்… வாழ்ந்த நினைவலைகள்… எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.
 
மற்றோர் உடலில் குடியேறித் தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான் இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும்.
 
ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.
 
நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பெடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.

ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது…!