ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2020

ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே… ஐக்கியமாகிவிடு ஈஸ்வரபட்டாய குருதேவா - ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டுமென்று அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது.
1.ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால்
2.அந்த நல் உணர்வுகளைச் செயல்படுத்த முடியவில்லை.
 
பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.
 
ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?
 
சப்தரிஷியாய் சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை. ஏனென்றால் பிறப்பில் வரும் பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில்… ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைப்படுகிறது.
 
1.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும் பொழுது
2.முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இந்த இச்சை நிலையினால் தான்.
 
பிறப்பிற்கு வந்து விட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் “பிறப்பு…” என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது. அதனால்தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.
 
ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன்.
 
பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார். அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார் “பைத்தியக் கோலம் பூண்டு…!”
 
பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.
 
அந்த நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான “தங்கம்” செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல் படுவதையும் உணர்த்திட்டேன்.
 
1.எம்மை ஒரு கருவியாக்கி எம்மால் அடையும் பலனைப் பற்றித் தான் விரும்பினார்களே தவிர
2.அழியாத பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் விரும்பவில்லை.
 
பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்...
1.எம்மிடமுள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயனென்ன…?
3.பயன் என்பதையே அழியப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!
 
அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் (ஞானகுரு) பிடித்தேன். அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான்.
 
அஜ்ஜென்ம ஆசையிலிருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான். அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.
 
மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம். பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.
 
1.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான் அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்
2.பல ஆசை நிலைகளையும் ஊட்டி விட்டேன்
3.இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் (தற்கொலை) என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.
 
பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கி பல சக்திகளை வெளிப்படுத்தி பல ஆத்மாக்களுக்கு ஞான வழித் தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.
 
அந்த நிலையிலேயே எமக்குச் சிஷ்யனாக்கி… அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம் என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது.
 
ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தினேன்.
 
எம்மைப் போல் உள்ளவர்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு ரூபத்திலும்… மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செயல்களைச் செய்விக்கின்றோம்.   
1.அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான்...!
2.எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
3.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாகச் செயல்படுத்த முடியும்.
4.அதன் வழி வருவோர் அனைவரும் அவர்கள் வேறல்ல யான் (ஈஸ்வ்ரபட்டர்) வேறல்ல என்ற நிலையில் ஐக்கியப்பட்டே
5.எம் செயல் நிலை இவ்வுலகினில நடந்திடும்.