ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2020

ஒரு நாளைக்கு உயிரான ஈசனை எத்தனை முறை நினைக்கின்றோம்…?

இயற்கையின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனையோ இம்சைகளை எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார். முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப் பட்டேன்.
 
ஏனென்றால் சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…? அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார் குருநாதர்.
 
பரிணாம வளர்ச்சியில் உயிர் எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து மனிதனாக உருவாக்கி உள்ளது.
1.ஆனால் அந்த உயிரை மதிக்கமாட்டேன் என்கின்றார்களே…!
2.உடலைத்தான் மதிக்கின்றார்கள்… இந்த உயிரை யாரும் மதிப்பதில்லை.
 
நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல்… ஆண்டவனுக்கு இந்தச் சேவையைச் செய்…! என்றார் குருநாதர்.
 
 
ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலை ஆளுகின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் குருநாதர்.
 
 ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். குருநாதர் எனக்கு உணர்த்திய இந்த வழிப்படி
1.இப்பொழுது இங்கே சொல்லக் கூடிய உபதேசங்களை நீங்கள் நுகரப்படும்போது
2.அந்த ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை இந்த அருள் உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.
 
எது…?
 
கோவிலில் பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்…! அதாவது நம் நல்ல குணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் “அந்தப் பாலைப்போல் மனம் பெற வேண்டும்… என்று நாம் எண்ண வேண்டும்.
 
ஆனால் வேதனை உணர்வை எடுக்கப்படும் பொழுது பாருங்கள். இந்த வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வார்கள். இந்த உயிரில் அந்த வேதனை தான் அபிஷேகம் ஆகும்.
 
வேதனை உணர்ச்சிகள் முன்னாடி இருக்கின்றது. அப்பொழுது பாலாபிஷேகம் செய்தால் என்ன செய்யும்…?
1.விஷத்தில் பாலை ஊற்றினால் என்ன செய்யும்…! பாலும் விஷமாக மாறிவிடும்
2.அது போல் தான் யாம் கொடுக்கும் வாக்கும் பயனற்றதாகப் போகும்.
 
நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இதைப் பயனற்றதாக ஆக்காதீர்கள் என்று. சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழக வேண்டும்.
 
1.உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்
2.அவனை மதித்து அந்த அருளை பெற்றீர்கள் என்றால்
3.இந்த உடலுக்குப் பின் நீங்கள் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.
 
என்ன தான் ஆபரேஷன் செய்து உடலை நலம் பெறச் செய்தாலும் அடுத்தாற்படி மனிதனின் கடைசி முடிவு எங்கே செல்கிறது…! எடுத்துக் கொண்ட விஷமான உணர்வுக்குத் தக்க… இந்த உயிர்… நீ செய்தாய் அல்லவா…! என்று விஷம் கொண்ட உயிரினங்களில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
 
ஆனால் இதை எல்லாம் நமக்குள் தெரியச் செய்வது கார்த்திகேயே… சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது.
 
1.அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால்..
2.நாம் இன்றைக்கு மனிதன்… நாளைக்கு எடுத்துக் கொண்ட வேதனைக்குத் தக்க வேறு ஒரு உருவம்.
 
இது போன்ற நிலைக்கு உயிர் மாற்றிவிடும் என்ற நிலைகளில் தான் இத்தனையும் என் உடலில் பாய்ச்சி
1.நீ கெட்டதை நுகரப்படும்போது அது என்ன செய்கின்றது…?
2.எவ்வளவு நேரத்தில் அது உடலில் என்னென்னவெல்லாம்  செய்கின்றது…? என்று குருநாதர் காட்டினார்.
3.அவஸ்தைப்பட்டுத்தான் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன்.
 
அதற்குப் பின் அதை எப்படித் திருத்துவது என்று குருநாதர் சொன்ன நிலைகளைத் திருப்பி எடுத்து எனக்குள் மாற்றி அமைத்துக் கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களிடம் சொல்கின்றேன். அதை நீங்களும் எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.
 
உயிரணு தோன்றி உணர்வின் தன்மை முழுமையானது துருவ நட்சத்திரம்…! அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உங்களுக்குள் செலுத்தி எப்படியாவது அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.
 
1.“உயிரான ஆண்டவன் உங்களை ஆண்டு கொண்டிருக்கின்றானே…
2.அவனுக்கு என் சேவையை நான் செய்வதற்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அனுப்பி வைக்கின்றேன்.
 
ஆனால் அப்படி அனுப்பும் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கஷ்டத்தையும் வேதனையையும் எண்ணிக் கொண்டு வந்தால் எப்படி உள்ளுக்குள் போக போடுவீர்கள்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!
 
இந்த நாடு… உலகம்… காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக உள்ளது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் அல்லவா…!
 
பிறந்துவிட்டோம்… மனிதராக வளர்ந்துவிட்டோம் மனிதனுக்குபின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அதுதான் கடைசி நிலை…!
 
நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குபவன் உயிர். அது ஈசனாக இருக்கிறது. உருவாக்கிய உணர்வு உடலாகி சிவமாகின்றது. உடலான இந்தச் சிவத்திற்குள் தீமையை நீக்கிய உணர்வு மணம் அந்தக் குணம் ஆறாவது அறிவாக இருக்கின்றது.
 
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து
4.உங்களைத் தெளிவாக்கி கொள்ளுங்கள் என்று தான் யாம் சொல்கிறோம்.

அந்தத் தீமையை நீக்கிய உணர்வின் தன்மையை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலிலுள்ள இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஒளியான அணுக்கள் உங்களுக்குள் பெருகும்.