ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2020

நம்மையும் உலகையும் அமைதி பெறச் செய்யும் சக்தி

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் உலக மக்களுடைய குறைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் நாம் கண்ணால் உற்றுப் பார்க்கின்றோம்.
 
ஏனென்றால் பிறருடன் பேசும் போது கண் கொண்டு உற்றுப் பார்க்கப்படும்போது அந்தந்த உணர்வுகளை நம் கண்கள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக நம்முள் பதிவாக்கி விடுகின்றது.
 
அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் எந்தெந்த உணர்வுகளைக் கவர்ந்தோமோ அதன் உணர்வுப்படி உயிர் நம்மை வழி நடத்திச் சென்று விடுகின்றது.
 
அந்த உணர்வுகளை இயக்குவது யார் நமது உயிரே. அதன் வழியில் நம்மை ஆட்சியும் புரிகின்றது நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள்.
 
அதன் உணர்வுகளைக் கவர்ந்து நுகர்ந்த பின் நம் இரத்த நாளங்களில் கலந்துவிடுகிறது. இரத்தத்தின் வழியாக உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும் அந்த உணர்வுகள் கலந்து தீமை செய்யும் உணர்வுகளாக உருவாகத் தொடங்குகிறது.
 
அந்தத் தீமை செய்யும் உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் வளராது தடுக்க “எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா...!” என்று நாம் எண்ணி ஏங்குதல் வேண்டும்.
 
அதை நாம் நுகர்ந்தோம் என்றால் அந்த உணர்வு ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் இரத்த நாளங்களில் ஜீவ அணுவாக உருவாகும் நம் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியை நமக்குள் பரப்பும்.
 
இவ்வாறு நாம் செய்தோமென்றால்...
1.நம் உயிரை நாம் மதித்தவர்கள் ஆகின்றோம்
2.நம் உடலையும் நாம் மதித்தவர்கள் ஆகின்றோம்.
 
காரணம்... இதற்கு முன்பு பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வு கொண்டு... “தப்பித்துக் கொள்ளும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்றுத் தான்..” இன்று இத்தகைய மனித உடலை உயிர் உருவாக்கி உள்ளது.
 
ஆகவே எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உயிர் உருவாக்கிய நிலையில் தீமையென்ற நிலையை நமக்குள் வளர்த்திடாது பாதுகாத்தல் வேண்டும்.
 
எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா...!
 
நமது பேச்சும்... நமது வாழ்க்கையும்... நமது செயல்களும்... நாம் நுகரும் உணர்வுகள் கொண்டு இந்த உலகில் யாரிடம் பேசினாலும் பழகினாலும்...
1.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டுமென்றும்
2.அமைதி பெற வேண்டுமென்றும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றும்
3.இத்தகைய உணர்வுகளை நாம் நுகர வேண்டும்.
 
நுகர்ந்த இந்த நல் உணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்…” என்று நம் இரத்த நாளங்களில் பரவச் செய்கின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் உடலுக்குள் இணைந்து உடலில் உள்ள அணுக்களை அமைதி பெறச் செய்கின்றது.
 
ஏனென்றால் உலக மக்களின் உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே உண்டு. அந்த அணுக்களுக்கு இது போன்ற நல் உணர்வுகளை ஊட்டினால்
1.வெறுப்பென்றோ பகைமையென்றோ ஆகாதபடி நம் உடலுக்குள் மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.

2.இதே உணர்வுகள் மற்றவர்களுக்கும் நல் உணர்வின் அலைகளாகப் பாய்ந்து அவர்களையும் அமைதி பெறச் செய்யும்...!