ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2020

மந்திரம் தேவையில்லை...! எண்ணினாலே போதும்... உங்களுக்கு அரும் பெரும் சக்தி கிடைக்கும்...!

யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்திற்கு மந்திரம் சொல்ல வேண்டும்... அது எனக்கு மறந்து போய் விட்டது...! என்று எல்லாம் நீங்கள் சொல்லத் தேவை இல்லை.
 
ஈஸ்வரா... என்று உயிரை உங்கள் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..! என்று உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்தினாலே போதும்.
 
எந்த நல்லதைச் செய்ய விரும்புகிறீர்களோ அந்தக் காரியம் நல்லதாக இருக்க வேண்டும் என்று என்ணினாலே போதுமானது.
 
ஆனால் துருவ நட்சத்திரத்தை நினைத்தேன்... தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது... என்றைக்குத் தான் போகுமோ...? என் வயிற்று வலி என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று இருக்கிறது என்று இதைத் தியானித்தால்
1.இன்னும் விஷம் அதிகமாகப் போகும்
2.சுத்திகரிக்கும் நிலையே மாறிவிடும்.
 
ஆகவே இதைப் போன்ற நிலைகளை விடுத்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுகின்றேன். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் இரத்த நாளங்களில் கலக்கின்றது. என் உடல் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது. நோய் நீக்கும் சக்தி அந்த அரும் பெரும் சக்தியை நான் பெறுகின்றேன்...! என்று எண்ணுதல் வேண்டும்.
 
சர்க்கரைச் சத்தோ... இரத்தக் கொதிப்போ... வாத நோயோ... எதுவாக இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எனக்குள் சர்க்கரைச் சத்தை நீக்கும் அந்த அரும் பெரும் சக்தி வளர வேண்டும்.
 
அதே மாதிரி இரத்த கொதிப்பை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும். ஆஸ்துமா போன்ற நோய்கள் நீக்கி அந்த அரும்பெரும் சக்தி எனக்குள் பெற வேண்டும் என்று இதை மாற்றியமைக்க வேண்டும்.
 
இதைப்போல தியானத்தின் முலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வாருங்கள்.
 
1.இந்த உணர்வை நீங்கள் அடிக்கடி அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
2.இத நுகர நுகர உங்கள் இரத்த நாளங்கள் பரிசுத்தமாகும்
3.எந்த நோயாக இருந்தாலும் அதை நீங்கள் மாற்றி அமைக்கும் நிலை வரும்.
 
உங்கள் எண்ணத்தால் தான் நோய் வருகின்றது. உங்கள் எண்ணத்தாலேயே அதைப் போக்கவும் முடியும்.
 
எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றது...? பிறர் படும் தீமைகளை அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வை உற்றுப் பார்க்கின்றோம். அவர் உடலில் இருந்து வருவதை நுகர்கின்றோம்.
 
நுகர்ந்தது நம் இரத்த நாளங்களில் கலந்து நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் முறைகள் வருகின்றது. ஒன்றுக்கொன்று மோதல் அதிகமாகும்போது இந்த உணர்வின் தன்மை வரும்.
 
இடைப்பட்ட நேரத்தில் இதைச் சமப்படுத்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்... அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் இதைச் சமப்படுத்தலாம்.
 
இதில் ஒன்றும் சிரமம் இல்லை...!
 
ஏனென்றால் ஒருத்தருக்கொருத்தர் குடும்பத்தில் சண்டை போட்டுப் பல சிக்கல்கள் வருகின்றது. இதை யார் பஞ்சாயத்து செய்தாலும் ஒன்றும் நடக்காது.
 
அந்த உணர்வுக்கொப்பத் தான் இப்படிப்பட்ட செயலாக்கங்களும். அந்த உணர்வுக்கொப்பத்தான் இந்த எண்ணங்களும் வரும்.
 
அதை மாற்றிட...
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என்னை இயக்கும் இந்த சக்தியிலிருந்து நான் விடுபட வேண்டும்.
3.என் பார்வையில் அனைவரும் நலமாக வேண்டும்
4.அனைவரும் நல்ல உணர்வுகளைப் பெறும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வை எண்ணினால் பகைமையான உணர்வு நமக்குள் வளர்க்காது பாதுகாக்கலாம்.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டிட குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். இனி வரும் காலத்தில் அனைவரும் பிறவி இல்லை என்ற நிலை பெற வேண்டும்.
 
ஏகாந்த நிலைகள் கொண்டு... எதுவுமே நம்மைத் தாக்கிடாது... எதையுமே வென்றிடும் உணர்வுகளை நாம் இந்த மனித உடலில் உருவாக்கினால்தான் உடலை விட்டு உயிர் சென்றபின்... இந்த உணர்வின் துணை கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 
இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உடலின் தன்மை பெற்று அந்த உடலைக் காத்திடும் எண்ணங்கள் தான் வரும். உயிராத்மாவை ஒளியாக்கும் எண்ணம் வராது.
 
ஆனால் நம் உணர்வுகளை ஒளியாக்கி விட்டால் இருள் என்ற நிலை வராதபடி ஒளிச் சரீரம் நாம் பெறலாம். ஒளியாக மாற்றும் அந்தத் திறனை உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
 
1.மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் அன்னை தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.இப்படி நாம் அடிக்கடி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்வோம்.