ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2020

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்

நம் உடலில் உறுப்புகள் பழுதானால் மாற்று உறுப்பு கொண்டு சரி செய்கிறோம். உறுப்பை மாற்றி வாழ்ந்தாலும் சிறிது காலமே வாழ்கின்றோம். ஆகவே இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.
 
அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.
 
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்
2.அதன் வழியில் இருளை நீக்க வேண்டும்
3.வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன்
4.இதை ஏங்கிக் கேட்டு கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.
5.பதிவான ஞானிகளின் உணர்வை மீண்டும் எண்ணினால் அந்த ஞானத்தை உங்களால் பெற முடியும்… அந்த வழியைக் காட்டும்.
 
நமக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வை உற்றுப் பார்த்தால் அது பதிவாகின்றது.
 
அவன் தவறு செய்தான்… தவறு செய்தான்… என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது அந்த உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அதனால் தீய உணர்வே வருகிறது
 
அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.
 
நாம் எண்ணும் எண்ணம் எதுவோ அதிலே நம் கண் பார்வையைச் செலுத்திய பின் இந்த காற்றில் உள்ளதைக் கவர்ந்து (சுவாசித்து) நம் உயிரிலே மோதச் செய்கின்றது. இந்த உணர்வுகள் நம் அறிவாக இயக்கக்கூடிய நிலை வருகின்றது.
 
1.தீமை என்றால் தீமையின் அறிவாக நம்மை இயக்குகின்றது…
2.அப்பொழுது தீமையின் உணர்வையே நம்முள் வளர்த்து விடுகின்றது.
 
ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணினால்
1.அதற்குண்டான வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக எண்ணி எடுத்து
2.தீமையை நீக்கினால் ஒழிய நாம் வேறு வழியில் அந்தத் தீமையை நீக்க முடியாது.
 
ஒரு வலிமை கொண்டவனின் (போக்கிரி) உணர்வு நமக்குள் வந்தால் நம் சாந்த உணர்வுகள் அடங்கிவிடுகிறது. என்ன தான் நம் மனதைச் சமாதானப்படுத்தினாலும் அந்த வலிமை நமக்குள் திடுக்… திடுக்… என்று அச்சத்தை ஊட்டி உடலிலே கடும் நோயாக வந்து விடுகின்றது.
 
நாம் எவ்வளவு நல்லவராக வேண்டுமென்று விரும்பினாலும் இதையெல்லாம் நமக்குள் வளர்ச்சியாகி நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கையில் கடும் நோய்களாக உருவாகின்றது.
 
இதைத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…” என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
1.இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய குணங்களை அதிகமாகச் சுவாசிக்கின்றோமோ
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலாக நம்மை மாற்றி விடுகின்றது. 
 
அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வரும் நஞ்சை வென்ற உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது வசிஷ்டர் பிரம்ம குரு.
 
அதை நுகர்ந்து உடலுக்குள் பெருக்கிக் கொண்டால்… இந்த வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பற்று அதிகமானால்… அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
 
ஆகவே அதன் மார்க்கங்களை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் தியானத்தில் உங்களுக்கு பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
 
உதாரணமாக நம்மை ஒருவன் திட்டினான் என்றால் அந்தத் திட்டியவனை எண்ணி அதை நுகர்ந்த பின் அந்தத் தீமையின் செயலே நமக்குள் வருகின்றது. அதே போல் வேதனைப்படுவோரை எண்ணும்போது அந்த வேதனைப்படும் செயலே நமக்குள் வருகின்றது.
 
1.வேதனைப்படுவோரை பார்க்கும்போது அதே நிலை.
2.வேதனைப்படுத்துவோரின் செயலை எண்ணும் போது அதுவும் தீய உணர்வாக நம்மை இயக்கி ஆத்திரப்படச் செய்கிறது.
 
அதைப் போன்ற தீமைகளை நீக்கிடத் தான் உங்களுக்குள் அரும் பெரும் சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது பெறும்படி செய்கிறோம்.
 
அகஸ்தியன் எப்படித் தன் தாயின் கருவிலிருந்தே தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றானோ அதைப் போல நுகர்ந்தறியப்படும் போது உங்கள் இரத்தத்தில் கலந்து… அங்கே கருத்தன்மைகள் உருவாகிறது.
 
கருவான பின் உடல் முழுவதற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவி உடல் உறுப்புகளில் உள்ள இருளை நீக்கும் உணர்வுகளாகப் அது பெருகத் தொடங்கும்.
 
1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்க்கப்படும்போது
2.எல்லா உறுப்புக்களிலும் இந்த தீமையை நீக்கும் உணர்வுகள் பெருகி 
3.ஒளி என்ற உணர்வின் அறிவைப் பெருக்குகின்றது… ஒளியின் சரீரம் பெற நாம் தகுதி பெறுகின்றோம்.