ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2020

நம் ஆறாவது அறிவு தீமைகளைத் தடுக்கும் சேனாதிபதி…!


நம்முடைய ஆறாவது அறிவைக் கார்த்திகேயா... சேனாதிபதி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் ஒரு கஷ்டம் என்று தெரிகின்றது. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்...” அந்தத் தீமை நமக்குள் இயக்காதபடி தடுக்க வேண்டும்.

அதற்காகத் தன் படைக்கலத்தை எப்படிப் பாதுகாப்பது...? என்ற நிலையில்... சேனாதிபதி எல்லாக் கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.. இல்லையா...?

ஆகவே அந்தத் தீமைகளை நீக்கிடும் சக்தியைப் பெறுவதற்குண்டான முறைகளைத் தான் இங்கே உங்களுக்குப் பழகிக் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லிப் புருவ மத்தியில் எண்ணி இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

ஏனென்றால் தப்பு யாரும் செய்யவில்லை. நாம் நினைக்கின்றோம் நாம் தான் தப்பு செய்கின்றோம்... தப்பு செய்கின்றோம்... என்று..! நாம் அல்ல...!

1.நெருப்பிலே ஒரு பொருள் போட்டால் எப்படி அதனின் வாசனை வருகின்றதோ
2.இதே மாதிரித் தான் நம் உயிரிலே படும் உணர்வுக்குத்தக்க நாம் அடிமையாகின்றோம்.

இந்த ஆறாவது அறிவு நம் உடலில் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினைப் பிரித்து மலமாக விடுகின்றது. நல்ல உணர்வின் சக்திகளை நம் உடலாக்குகின்றது.

ஆக... நஞ்சின் தன்மையைப் பிரிக்கக்கூடிய சக்தி தான் ஆறாவது அறிவு.
1.அந்த ஆறாவது அறிவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம் உயிரிலே மோதச் செய்ய வேண்டும்.
2.அப்பொழுது கெட்டது நமக்குள் போகாதபடி மறைப்பு வந்து விடுகின்றது... சேனாதிபதி...!
3.படைகலன்களான உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களெல்லாம் அதைப் பெறும் அந்தச் சக்தியை நாம் கொடுக்கின்றோம்.

உடனே இது நமக்குள் வலுவாகின்றது. உள்ளுக்குள் போன பின் என்ன செய்கிறது..?
1.துணியில் ஒரு சோப்பைப் போட்டால் உள்ளுக்குள் அந்த நுரை ஏறி
2.அதில் உள்ள அழுக்கைத் தள்ளிவிடுவது போல் நம் தீமைகளை அகற்றிவிடுகின்றது.

ஆனால் நாம் இப்பொழுது அடிக்கடி குடும்பத்தை எண்ணியோ பையனை எண்ணியோ தொழிலை எண்ணியோ கவலைப்படுவது... சஞ்சலப்படுவது... அல்லது ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்திற்குப் போகச் சொல்வது... இதெல்லாம் அதனுடைய இஷ்டத்திற்குத் தான் நாம் செல்கின்றோம்.

அதை மாற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று சொல்லி உள்ளுக்குள் “கட்டளை இட வேண்டும்... தீமைகள் விலகிப் போகும்...!”

பையனுக்கு நல்ல ஞானமும் புத்தியும் பெற வேண்டும். என் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என் தொழில் சீராக இருக்க வேண்டும் என்று பதிவு (ரெக்கார்ட்) செய்து கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை நல்ல முறையில் வரும்.

அதே போல் உடலில் நோய் வந்தால் அந்த நோய்க்குத் தான் எண்ணத்தைச் செலுத்துகின்றோமே தவிர நோயை நீக்க எண்ணம் கொடுப்பதில்லை.

அப்பொழுது அதற்கு என்ன செய்ய வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று எங்கே வலிக்கின்றதோ... இடுப்பு வலியோ அல்லது முதுகுத் தண்டிலோ அல்லது மற்ற எந்த இடமாக இருந்தாலும் அங்கே நம் கண்ணால் இந்த வலிமையான சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

ஏனென்றால் “வலிக்கிறது...” என்று எண்ணினாலும் நம் கண்ணின் நினைவு அங்கே தான் செல்கிறது. அதே கண்ணின் நினைவு கொண்டு வலிக்கும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எந்த இடத்தில் வலி வருகிறதோ அந்த இடத்தில் நினைவினைச் செலுத்தி வலியை உங்களால் குறைக்க முடியும். அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

இந்த மாதிரி இருந்து எண்ணிப் பழகி விட்டோமென்றால் மனத் தூய்மை கிடக்கும்... மன வலிமை கிடைக்கும் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும். தீமையை அகற்றும் வலிமை நிச்சயம் கிடைக்கும்.

1.ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.அதனாலே நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிடுங்கள்.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகின்றதல்லவா...?