ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2020

இந்த மனித வாழ்க்கையில் நம் வளர்க்க வேண்டிய பேராசை எது…?


யாம் (ஞானகுரு) உங்களிடம் பதிவு செய்யும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூர்ந்து கவனிக்கும்போது கண் (ஆண்டனா) மூலம் தான் உங்கள் உடலுக்குள் அதைப் பதிவாக்குகின்றது.

இப்பொழுது மீண்டும் அந்த எண்ணத்தை எண்ணி வரப்படும்போது அந்தக் காற்றில் எது இருக்கின்றதோ அதை இழுத்து நமது கண் நம் ஆன்மாவாக்கி சுவாசித்து நமது உயிரிலே மோதச் செய்கிறது.

இந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது நமது கண் ஆண்டன்னா… ஏரியல்… மூலம் வெளியிலிருந்து அந்தத் துருவ நட்சத்திர அலைகளை எடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறக்கூடிய அந்த சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று இந்த ஆசை தொடர்ந்து நமக்கு இருக்க வேண்டும்

ஆசைப்பட்டு நாம் நுகரும் இந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்கின்றது. ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் அதைப் பெறுவதற்குத் தனித்து வந்து இதை இயக்கச் செய்வது தான் இந்த வழி.

ஏனென்றால் இந்த விஷத் தன்மையான உலகில் நீங்கள் சீக்கிரம் இதை பெற்றுக் கொண்டீர்கள் என்றால்
1.உங்கள் உடல் நன்றாக இருக்கும்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்
4.உலகமும் நலம் பெறக்கூடிய சக்தி பெற முடியும்.

ஏனென்றால் உலகமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை.

இந்த உலக இயல்பு நாம் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால் இதை மாற்றுவதற்குத்தான் என் குருநாதர் எப்படி எமக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.

ஆனால் இந்த வாழ்க்கையில் நம் ஆசையை எங்கேயோ வைத்துக் கொண்டு…
1.தொழில் இப்படி இருக்க வேண்டும்
2.நான் இப்படி எல்லாம் இருக்க வேண்டும்…
3.நான் பெயரும் புகழும் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில்
3.இந்த ஆசை கொண்டு அந்த ஒன்றிலே போகும் போது சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.

எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! நம்மை மாற்றிக் கொண்டே போகும்… கடைசியில் படும் பாதாளத்தில் கொண்டு செல்லும்.

ஆனால் நம் ஆசை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் போனால் அங்கே இணைந்து… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி என்ற உணர்வாக நம்மை மாற்றுகின்றது.

அந்த நிலை பெறச் செய்வதற்காகத்தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி இதை நினைவுபடுத்துகின்றேன்.

நம் அன்னை தந்தையர் தான் இந்த உடலை உருவாக்கியது… நமக்கு நல்ல வழிகளை உணர்த்தியதும் அவர்கள் தான். அது குருவாகவே இருக்கின்றது. குரு எனக்கு இந்த வழியில் தான் காட்டினார்

ஆகவே ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும் முதலில் அம்மா அப்பாவை மனதில் எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின் இருளை நீக்கி அந்த ஒளி பெறும் உணர்வைப் பெறுவதற்கு… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன உணர்வை
1.அவர் சொன்னபடி பின்பற்றினேன்
2.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்
3.அந்த உணர்வு என் உடலில் என்ன செய்கிறது என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்பதை உங்களுக்கும் உணர்த்துகின்றேன்
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

ஒரு பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எப்படி எடுத்ததோ இந்தச் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வைச் சுவாசித்து அந்த ஒளி மயமான நிலைகள் பெற முடியும்.

கணவன் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றித் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும் சொல்லிலே வைரத்தைப் போல் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதைப் போல எதைப் பார்த்தாலும் நம் மனது மங்காத நிலைகள் நாம் கொண்டு வரவேண்டும். மலர் எப்படி நல்ல நறுமணங்கள் கொடுக்கின்றதோ அதைப் போல் உங்கள் சொல் மற்றவர்களுக்கு நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி கொண்டுவர வேண்டும்.

அந்தச் சக்தியை ஒவ்வொருவரும் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைச் செய்கின்றோம்.
1.நீங்கள் இதை பெற வேண்டுமென்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.
2.அதே போல் எல்லோருக்கும் இந்தச் சக்தி பெறவேண்டும் என்கிற பொழுது இது பேராசையாக மாறுகின்றது.

நானும் பெறவேண்டும்.. நீங்களும் பெற வேண்டும் என்கிற போது நான் பெறக்கூடிய ஆசை நீங்களும் பெற வேண்டும் என்ற நிலையில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இந்தப் பேராசை நம்முள் வளரும்.

ஆனால் உங்களுக்கு நான் சொல்லிக் கொடுத்து விட்டுத் தவறான வழியில் ஏமாற்றினால் அது பேயாசைதான்.

அதே போல் சாமி (ஞானகுரு) இப்படியெல்லாம் சொல்கின்றார்…! என்று என் பெயரைச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினால் அது பேயாசை தான்…! அவர்களையும் கெடுத்து… நீங்களும் கெட்டு.. மற்றவர்களையும் பெறக் கூடியதைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.

1.ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு
2.அந்தத் தீமைக்குச் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடும்
3.நாம் பெறக்கூடிய நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்
4.முதலில் தெரியாது…. சிக்கலான பிற்பாடு… வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் உணர முடியும்.
5.அது போன்ற நிலையிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் மீண்டும் மீண்டும் இதை எச்சரிக்கை செய்கின்றோம்.

உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை நீங்கள் தெளிவாகுவதற்குத்தான் இதைக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் நல்ல வழிக்கு பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிப் பிறவியில்லா நிலை அடையலாம்.