ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2020

மகாத்மா காந்திஜியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இறைவனின் சக்தி பெற்ற இறைவன் தான் நாமுமே...!
 
நம் சக்தியை உயர்ந்த நிலைப்படுத்தி நாம் இவ்வளவு காலங்களும் நம்முள் வளர்த்து வந்த தீய சக்திகளை அடிபணிய வைத்து நம் இறை சக்தியை உணரும் முறை அறிந்தே வழி நடந்திடல் வேண்டும்.
 
இக்கலியின் கடைசி நூற்றாண்டில் தோன்றி மகானாக அவதரித்த அவரும் அவதாரத்தில் மகானாகத் தோன்றவில்லை.
 
எல்லோரையும் போல் பிறவி எடுத்து...
1.பிறப்புடன் பல தவறு கொண்ட வாழ்க்கையில் வழி நடந்து வாழ்ந்து தான் 
2.அந்த நிலையை உணரும் தருவாயில் தன் ஞான சக்தியை வளர்த்து
3.அதை அனைவரும் உணர்ந்திட பல இன்னல்களை ஏற்று அந்த ஞானத்தின் தொடரை தனதாக நிலைநாட்டி
4.இன்றைய மக்கள் உணரும் மகாத்மாவாக வாழ்ந்து காட்டினார்.
 
அந்த நிலையிலும் தான் என்ற தனதாக்கும் இறை பக்தியின் வழியின் பேராசை இல்லாததினால் சக்தி நிலை கொண்ட மகாத்மாவாக ஆனார்.
 
நாம் கண்டு நம்முடன் ஒன்றிய ஓர் ஆத்மாவே மகாத்மாவாக உயர்ந்துள்ளதை உணர்ந்து அவரையே ஆண்டவனாக அவர் அடி நடந்திட்டாலே “நம் ஆத்ம ஜெபமும் கூடும்...” என்ற உணரும் நிலை அவருடன் கலந்து வாழ்ந்தவருக்கும் அன்றும் இல்லை... இன்றும் இல்லை...!
 
1.அன்று நடந்ததுவும்... இன்று நடப்பதுவும் நாளை கனவு தான்...
2.நிலைத்து நிற்பவை அந்த மகாத்மாவைப் போன்றோர் சேமித்து வளரவிட்ட
3.அவர் ரூபத்தில் அவரால் ஏற்படுத்திய நற்போதனை நிலைகள் தான் கனவில்லாத உண்மை சக்தி நிலை.
 
ஆகவே... இன்று இந்தப் பூமியில் வாழ்ந்திடும் இப்பாக்கியத்தை... நம் உடலில் உள்ள இந்த ஈர்க்கும் சக்தியைக் கொண்டே... அனைத்து சக்தியையும் கண்டிடும் பக்குவ நிலையை உணர்ந்தே...
1.இறை பக்தியின் தொடர்பை ஈர்த்து
2.அந்த இறை ஞானம் பெற்றவர்களின் நல் வழித் தொடரில் சென்றிடுங்கள்.