ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2020

சாகாக்கலை... வேகா நிலை... போகாப்புனல்... இராமலிங்க அடிகள் சொன்னது

1.அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கண்டுணர்ந்ததும் தன்னை அறிந்ததும்
2.அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து
3.பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து
4.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை இருளை நீக்கி
5.தன் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாகி  
6.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைந்துள்ளார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்று சப்தரிஷி மண்டலங்களாக அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

மனிதனில் உயர்ந்த நிலைகள் பெற்றவர்கள்… வாழ்வில் பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைந்து… அழியா ஒளிசரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின்படி அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோமென்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முடியும்.

இவ்வாறு இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிடும் உணர்வின் தன்மைகளைத் தன்னுள் எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக இந்த உடலிலே பிறவா நிலை என்ற பெரு நிலை அடைகின்றனர். இதற்குப் பெயர் “வேகா நிலை…”

இன்று நமது வாழ்க்கையில் எந்தந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ அது சாகாக்கலையாக வளர்ந்து இந்த உடலை விட்டு அகன்றாலும் அந்தக் கலையின் உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப மீண்டும் உடலின் அமைப்புகள் அமைகின்றது.

இதைத் தான் சாகாக்கலை வேகா நிலை போகாப்புனல்…! என்று தற்காலத்தில் இராமலிங்க அடிகள் இதைத் தெளிவாக்கியுள்ளார்.

தீயில் விழுந்தால் உயிர் கருகுவதில்லை. உயிர் வேகா நிலை...!

1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றி உணர்வு அனைத்தையும் வேகா நிலை பெற்று
3.உடலை விட்டு அகன்றால் என்றும் போகாப்புனல் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார் இராமலிங்க அடிகள்.

இதைப் போன்று நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... என்று நம் உயிரையும் உயிரின் இயக்கத்தையும் உயிரால் இயக்கப்பட்டு மனிதனாக ஆன நிலையும் உணர்ந்து
1.மனிதனானபின் நாம் இப்போது எங்கே செல்ல வேண்டும் என்பதை நினைவுப்படுத்தி
2.அதன்படி நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவதே மேல்…!