ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2019

காயகல்ப சக்தியை இயற்கையாகவே அன்றைய சித்தர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


எண்ணம் கொண்டு தான் மனித வாழ்க்கை அமைகிறது என்ற நிலைகளை எடுத்து உரைத்து வந்தேன். மனப் பக்குவம் கொண்டு செயல்படும் நிலையில் உலகோதய வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணத் தன்மைகள் அலை அலையாக வந்து மோதிக் கொண்டே தான் உள்ளது.

கடலில் துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளை எல்லாம் கடந்து சென்று தான் சேர வேண்டிய இடத்தைச் சேர்கிறது. அதைப் போல் நம்மிடம் அலை அலையாக வந்து மோதும் உணர்வுகளை நாம் சமப்படுத்திடல் வேண்டும்.

1.சமப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு
2.அதற்குண்டான வழி முறைகளை அமைக்கும் சிந்தையை நிலை நிறுத்தி
3.சித்தன் என்ற நிலையை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.
4.இந்தப் பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு... தாழ்வு... முறைகளுக்கு அல்ல.

மருத்துவ முறைகளைப் பற்றிச் சொல்லி மருந்துகளைக் கொடுத்தாலும் நம் எண்ணத்தால் கிடைக்கும் நிறைவு தான் சரீரத்திற்குச் சுகம் அளிக்கின்றது.

உடல் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்தை உட்கொண்டால் உடலுக்குள் செல்லும் மருந்து வீரியம் கொண்டு எதிர் மோதல் குணத் தன்மைகளில் செயல்பட்டு நோயை விலக்கினாலும்
1.மீண்டும் அதே நோய் வருவதெல்லாம் எண்ணத்தின் செயலினால் தான்...!
2.ஆக நோய் வருவது உடலிலா...? எண்ணத்திலா…?
3.சுவாச நிலையின் இயல்புத் தன்மைகளை நாம் மாற்றி விட்டாலே
4.அதனால் தோன்றும் எண்ணங்களும் அதனின் ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்களும் இயற்கையினாலா...?
5.அல்லது நம்மை அறியாது நாம் உருவாக்குகின்றோமா...? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்.
6.விடையை அறிந்து நம் எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பினால் நல்லாக்கம் பெற்றிடலாம்.

வருடா வருடம் கார்த்திகை தீபத்தைப் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருளைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கின்றோமா...? ஏனென்றால் இன்றைய நடை முறைக்கு அது பெரும் சடங்காகிவிட்டது.

அன்று சித்தன் கண்ட அதனின் உண்மைப் பொருள் என்ன..?

பௌர்ணமி நிலவிலிருந்து வரும் ஒளி சக்தியும் சில நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் இது இரண்டும் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து செயல் கொண்டிடும் நிலையில் “சூட்சம வித்தின் தன்மைகளை...” பூமித் தாய் நமக்கு அளிக்கின்றாள்.

அதை மறைபொருளாகக் காட்டி உயிராத்மா ஜோதி நிலை அடைய வேண்டியதன் உட் பொருளைக் காட்டினார்கள் சித்தர்கள்.

கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி மூலம் பூமி ஈர்த்துப் பெற்றிடும் அந்தச் சக்தியின் செயலையே “கார்த்திகை தீபமாக...” ஏற்றி வணங்கிடும் முறையாகக் காட்டப்பட்டது.

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை எடுத்து அனைத்தையும் வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில்
1.அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில்
2.உயர் ஞானம் கொண்டு அறிந்த காயகல்ப முறையே
3.ஜோதி தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

கார்த்திகை மார்கழி மாதக் காலங்களில் சிற்றின்பங்களை நுகர்வதை விடுத்து மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானிக்கச் செய்தனர்.
1.தன் சிந்தனையின் செயலை ஒருமுகப்படுத்தி
2.பௌர்ணமியில் பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகளைப் பெற்றிட
3.ஞானிகள் சிஷ்யர்களுக்கு உணர்த்திய வழி முறைகள் இவை எல்லாம்.
4.தியானத்தைப் பற்றி அறியாத வாய்மையின் சக்தி கொண்டோரும் அந்தச் சக்தியைப் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைக்கு அது எல்லாம் மாற்று நிலை பெற்றுவிட்டது.