ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2019

அமாவாசைப் பக்கம் உடலை விட்டுப் பிரிவோரின் உண்மை நிலைகள்..!


வேதனை என்றாலே விஷம் தான்…!

ஆக இந்த மனித வாழ்க்கையில் “வேதனை… வேதனை…” என்று எதை எடுத்தாலும் துயரப்படும் நிலைகள் கொண்டோர் உணர்வுகளில்
1.அதாவது அத்தகைய விஷத்தின் தன்மை கொண்டோர் அனைவருமே
2.பெரும் பகுதி “அமாவாசைப் பக்கம்” தான் ஜாஸ்தி இறப்பார்கள்.
3.அந்த விஷ அலைகள் பரவும் நேரங்கள் தான் அந்த ஆன்மா வெளியிலே செல்லும்.

இந்த உடலை விட்டு அப்படி வந்தது என்றால் பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அந்த விஷமும் இங்கே இந்த உடலில் சேர்த்துக் கொண்ட விஷமும் ஒத்த நிலைகளாகின்றது.

1.அதன் வழி கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கி
2.விஷத்தின் தன்மை கொண்ட உணர்வின் அணுக்களாகப் படும் இந்த உயிர்
3.அந்த பாம்பின் ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று நம்மை பாம்பாகச் செயல்படுத்தும்.

அதே சமயத்தில் ஆடு மாடு மற்ற இவைகள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கி அதாவது தான் உணவாக உட்கொண்ட நிலைகளில் இருக்கும் நஞ்சை உடலாக்கிக் கொண்டு அதனுடைய சாணத்தை நல்லதாக மாற்றுகிறது.

இத்தகைய தன்மையில் இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அதன் வலிமையின் தன்மை கொண்டு மாடு ஆடாகவோ பிறக்கச் செய்யும்.

ஆனால் மிகவும் அதிக விஷமானால் விஷத்தை பாய்ச்சும் வலுக் கொண்ட பாம்பாகும் நிலை வருகிறது.
1.ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து மற்றொருவர் ரசித்துச் சந்தோஷப்பட்டால்
2.நிச்சயம் அவர்கள் அடுத்துப் பாம்பாகத் தான் பிறப்பார்கள்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால் அடுத்த கணமே அந்த வேதனையை மறக்க “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று வேதனைகளை அடக்கிய நஞ்சை வென்று ஒளியாக மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.

அதே போல் வேதனைப்படுவோர் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.  

வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் இத்தகைய உணர்வின் வலுவை எடுத்து வலுவாக்கிக் கொண்டால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நமக்குள் வலு கூடி
2.நம் உயிரான்மாவில் அது பெருகி
3.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கிறோம்.
4.அழியாத ஒளி உடல் பெறுகின்றோம்.