ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2019

நம்முடைய உயிருடைய தீர்ப்பு எப்படிப்பட்டது…?


உயிருடன் எதை நாம் இணைக்கின்றோமோ அதற்குரிய “தீர்ப்பை (JUDGEMENT)” உயிர் கொடுத்தேவிடும்.

சிவ தத்துவத்தில் இதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரனை வைத்தது. நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று வைத்தது.
1.நந்தீஸ்வரன் என்றால்
2.சுவாசித்ததை உயிர் என்ற ஈசன் உருவாக்கும்.
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

கோபப்படுவோரைப் பார்த்தோம் என்றால் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. திரும்பத் திரும்ப வளர்க்கப்படும் பொழுது, கோபமான உணர்வு அதிகமாகி அந்தக் கணக்கின்படி நமக்கு இரத்தக் கொதிப்பு வருகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால் சாப்பாடு அவர்களுக்கு யாராவது கொண்டு வந்தார்கள் என்றால், “வள்…” என்று கத்தச் சொல்லும். உதவி செய்தார்கள் என்று எண்ணச் செய்யாது. புலி எப்படி உறுமித் தாக்குகின்றதோ அது போல நம்மை இயக்கும்.

நாம் ஒவ்வொரு உடல்களிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் மனிதனாக உருவாக்கியது, இந்த உயிரான ஈசனால் வளர்க்கப்பட்ட நிலைதான்.

ஆனால் தீமையை நீக்கும் சக்தி பெற்ற இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வு ஆனாலோ அந்தக் கணக்கு கூடினால் உயிர் என்ற ஈசன் இந்த உடலை விட்டுச் சென்றபின், சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப தீர்ப்பு!

1.நீ வேதனையை எடுத்ததனால், அங்கு சென்று பிறந்து பழகு,
2.நீ கஷ்டத்தை அனுபவி.
3.கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தாய் கஷ்டத்தை நீ அனுபவி என்று உயிர் உருவாக்கிவிடும்.
     
நாம் நினைக்கலாம். கோர்ட்டில் ஏறிப் போய் பொய் சாட்சி சொல்லலாம் என்று. ஆனால் உயிரிடம் மட்டும் யாரும் தப்ப முடியாது, என்பதை மறந்து விடக்கூடாது.

அதனால்தான் சிவதத்துவத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கின்படி பிறருடைய கஷ்டங்களையும், வேதனைகளையும் நாம் கேட்கின்றோம். அவைகள் பிற தோஷங்களாக நமக்குள் வந்துவிடுகின்றது.

அந்தப் பிற தோஷத்தை எப்படிப் போக்குவது? என்றுதான் சிவன் ஆலயத்தில் காட்டப்படுகின்றது.

நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்றால் நான்கு மணிக்கு ஆலயத்திற்குச் சென்று விளக்கு பூஜை வைத்து அர்ச்சனை செய்து விரதம் இருந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்தபின் நந்தியிடம் சென்று அதன் காதில் சொல்கின்றோம்.

அதாவது நான் எல்லோருக்கும் நன்மை செய்து கொண்டிருக்கின்றேன். குடும்பத்தில் நோயும் கஷ்டமும் வந்து கொண்டிருக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கின்றான். நீ போய் ஈசனிடம் சொல்..! என்று
1.பிறர் தோஷத்தைக் கழிப்பதற்கு மாறாக
2.அங்கும் அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

நமக்குள் அந்த நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று
1.அவன் எப்படி தீமைகளை நீக்கினானோ
2.அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு  நாம் எப்படி சுவாசிக்க வேண்டும்?

காலை நான்கு மணிக்கு இதை எடுத்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

இப்படி வளர்த்தால் நம் உயிர் இதனுடைய தீர்ப்பாக அந்த அகஸ்தியன் வாழும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்!