ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2019

மெய் ஞானத்தைப் பெறக்கூடிய பாக்கியம் எனக்கு எப்படிக் கிடைத்தது...?


தாய் வயிற்றில் நான் (ஞானகுரு) கருவாக இருக்கும்போது என்னுடைய பாட்டி என்ன் செய்திருக்கிறது...? என் அப்பாவுக்கு இரண்டாவது கல்யாணம் செய்ய முயற்சி செய்தது.

எனக்கு முன்னாடி மூன்று பேர் பிறந்திருக்கின்றார்கள். இருந்தாலும் என் அப்பாவிற்கு இரண்டாவது கல்யாணம் செய்ய வேண்டும் என்று என் பாட்டி அம்மாவை மிகவும் துன்புறுத்தியது.

நான் பிறந்த பிற்பாடு என் அம்மா என்னிடம் சொன்னது: எப்படியாவது இரண்டாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பாட்டி (என் அம்மாவின் மாமியார்) நிர்பந்தம் செய்தது.

அப்பொழுது நான் வேண்டாத தெய்வம் இல்லை. என் கணவருக்கு இரண்டாம் கல்யாணம் செய்யக் கூடாது...! என்று கோயில் குளம் எல்லாம் போய்ச் சுற்றி வந்தேன். என் குலதெய்வம்... மூதாதையர்களை எல்லாம் வேண்டினேன். (மூதாதையர்கள் - ஞானகுருவின் பாட்டனுடைய பாட்டன் கொஞ்சம் மந்திர சக்தி கற்றுக் கொண்டவர்கள்)

இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். நீ கர்ப்பத்தில் இருக்கும்போது தான் இதை எல்லாம் வேண்டினேன்.
1.அதுதானப்பா உனக்கு (ஞானகுரு) இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது.
2.நம்  குலதெய்வங்கள் எல்லாம் பக்கபலமாகச் சேர்ந்து நின்றது என்று அம்மா சொல்லியது.

என் அண்ணன் என்னுடைய அப்பா பெற்ற பாட்டியைத்தான் அம்மா என்று கூப்பிடுவார். என் அம்மாவை அம்மா என்று கூப்பிட மாட்டார். என் அம்மாவை மதிக்கவே மாட்டார். இது எல்லாம் நடந்த நிகழ்ச்சி.

என் அத்தைக்குப் பிள்ளை இல்லை. அதனால் அந்தச் சொத்தை என் அண்ணனுக்கு எழுதி  வைக்கலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். சொத்து போய்விடக் கூடாது என்று இதை எல்லாம் செய்தார்கள்.

ஆனால் என் அம்மாவின் மீது எங்கள் பாட்டிக்கு வெறுப்பு. இதை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றார். அனுபவத்திலே குருநாதர் கொடுத்த உண்மையின் உணர்வுகள் தான் இது.
1.ஆகவே உன் குடும்பத்திலே எப்படி இருக்கிறது...?
2.இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் இது எப்படி இருக்கும் பார்...! என்று காண்பித்தார்.

நான் பிறந்த பிற்பாடு என் பாட்டி எங்கம்மாவைத் திட்டியதோ கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதற்கு பின் இரண்டு பையன்கள் பிறந்து இறந்து போனார்கள்.

அதற்காக வேண்டி என் பாட்டி என்னைச் சாமி கும்பிடச் சொல்லி கழுத்திலே சூடு போட்டது. எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தெக்கத்தி நோய் (காக்காய் வலிப்பு போல் ஒரு நோய்) என்று சொல்வார்கள். அதற்கு இந்த மாதிரிச் போட்டோம் என்றால் அடுத்து அந்த நோய் வராது என்று அந்தக் காலத்தில் ஒரு மூட நம்பிக்கை.

ஏனென்றால் நான் முன்னாடி சொன்ன மாதிரி என் பெரியப்பா வீட்டில் அந்தப் பிள்ளைக்கு வந்தது போல் இங்கே அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக எனக்குத் தம்பி பிறந்த அன்று என் பாட்டி சூடு போட்டது.

தம்பி பிறந்திருக்கின்றான் சாமியைக் கும்பிடுடா என்று சொல்லியது. அந்தக் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.

என் பாட்டி அடிகடி திட்டிக் கொண்டிருந்ததால் ஒரு சமயம் என் அம்மா கிணற்றில் போய் விழுந்து விட்டது.

அங்கே எல்லாம் சிறிய வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். எனக்கு ஏழு வயது இருக்கும். அன்றைய தினம் லீவு வேறு. வீட்டிலும் யாரும் இல்லை.

கிணற்றில் குதித்து என் அம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினேன். அதிலே இருந்து அம்மாவுடனே நான் எப்பொழுதும் இருப்பேன். என் அம்மாவின் ஆசிதான் எனக்கு இந்தக் குரு அருள் கிடைத்தது.

1.என் அம்மா அது எடுத்துக் கொண்ட உணர்வு
2.அவர்கள் தெய்வத்தை வேண்டிய அருள் உணர்வுகள்
3.கருவில் விளைந்த அந்தப் பூர்வ புண்ணியம் தான் எனக்கு இந்த அளவுக்குச் சக்தி கிடைத்தது.
4.குரு அருளால் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலை எனக்கு (ஞானகுரு) வந்திருக்கிறது.
4.என் அண்ணனுக்கோ என் தம்பிக்கோ என் தங்கைக்கோ ஒருவருக்கும் இந்த ஞானம் கிடைக்கவில்லை.

ஏனென்றால் அனுபவபூர்வமாகக் குருநாதர் இந்த உணர்வுகளை எல்லாம் எனக்கு நினைவுபடுத்தி நீ எப்படி ஞானம் பெற்றாய்...? என்றும் உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது...? என்ற நிலையும் உணரச் செய்தார்

ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறுகள் இல்லாமலேயே சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலைகளில் தொல்லைகளும் சங்கடங்களும் எப்படி வருகிறது...? என்று இப்படி நிதர்சனமாகக் காட்டினார்.

இதைப் போல உண்மையின் நிலைகளை விளக்கச் செய்து மனிதன் என்ற பண்பை வளரச் செய்ய வேண்டும் என்றால் அந்த அகத்தியன் பெற்ற அருள் உணர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த் அருள் உணர்வுகளைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.