ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2019

நம் பூமியில் மனிதர்கள் அமைதியாக வாழ முடியாத நிலைகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது


இன்றைய விஞ்ஞான உலகத்தில் எந்த நாடு விஞ்ஞானத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதோ “அந்த நாடு” மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்…! என்ற உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்காக அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் நியூட்ரான் என்ற சில விஷத் தன்மையான குண்டுகளையும் விஷக் கிருமிகளைப் பரப்பக்கூடிய குண்டுகளையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

1.தங்களுடைய நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியாக அதை எல்லாம் ஒரு நாடு செய்தாலும்
2.மற்ற நாடுகளும் அதே போல ஆயுதங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று
3.உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அந்த ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டுள்ளார்கள்.

அப்படி எல்லா நாடுகளிலும் அணு ஆயுதங்களை உருவாக்கப்படும் போது அதனால் வெளி வரும் விஷத் தன்மைகளை எல்லாம் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து பூமி முழுவதும் அலைகளாகப் பரவச் செய்து கொண்டுள்ளது.

அப்படிப் பரவும் ஒரு விஷத் தன்மைக்கும் மறொரு விஷத் தன்மைக்கும் எதிர் நிலை ஆகும் போது பெரும் கொண்ட “சூறாவளியாக மாறுகின்றது…!”

அதனால் ஆயிரம் மைல் வேகத்தில் அது சுழலும் தன்மை பெற்றுக் கட்டிடங்களையும் மரங்களையும் அனைத்தையும் தூசி போல பறக்கச் செய்ய கூடிய நிலைகள் உலகெங்கிலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

அதே சமயம்
1.ஒவ்வொரு நாட்டிலேயும் அரசாங்க நிர்வாகம் சரி இல்லை என்ற நிலை கொண்டு
2.மதங்களின் அடிப்படையில் அல்லது அரசியல் கட்சியின் அடிப்படையில் தீவிரவாதம் என்ற நிலைகள் உருவாகிக் கொண்டுள்ளது.

அப்படி உருவாகும் தீவிரவாதங்களால் அமைதி கொண்டு வாழும் மக்களிடையே மீளாத் துயர்படும் நிலையும் மக்களுடைய வாழ்க்கையில் எந்த நிமிடம் எப்போது மடிவோம்…! என்ற நிலையில் அச்சம் ஏற்படும் நிலையும் உருவாகிக் கொண்டு வருகின்றது.

ஏனென்றால் புலன் அடங்கித் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத அதிர்வுகளை ஏற்படுவத்துவதும் கட்டிடங்களை நொறுக்குவதும் கூட்டம் நெரிசல் இருக்கும் இடங்களில் கார் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து மக்களைக் கொலை செய்வதும் போன்ற இரக்கமற்ற நிலைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் முதலில் சொன்ன அந்த விஷத் தன்மைகள் உலகம் முழுவதற்கும் பரவியது தான். இத்தகைய சூழ்நிலை எல்லா இடத்திலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

இதைப் போன்ற விஷத் தன்மைகள் பரவும் இந்த நேரத்தில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் பெருக்கி
2.எந்த விஷத் தன்மைகளும் நம்மைத் தாக்கிடாது பாதுகாத்தல் வேண்டும். 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையை நாம் பெறுகின்றோம்.

நம் உயிரான்மா இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து “அழியா ஒளிச் சரீரமாக வாழத் தொடங்கும்…”