ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2019

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பரிபக்குவ நிலை


உதாரணமாக பாலில் விஷம் பட்ட பின் அதை நாம் குடித்தால் மயக்கம் தான் வரும். சிந்திக்க முடியுமா...? அதே மாதிரி பாலில் காரம் பட்டு விட்டது என்றால் அதிலே இனிப்புப் போட்டிருந்தாலும் குடித்தால் ருசி வருமா...? வராது.

இதைப் போல் தான் நாம் நல்ல மனதுடன் இருந்தாலும் பிறருடைய தீமையான செயல்களைப் பார்க்கப்படும் பொழுது அது நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் நாம் அமைதி இழக்கின்றோம்.

அந்தத் தீமையின் இயக்கத்திலிருந்து காத்துக் கொள்வற்குத்தான் இந்த அதிகாலைத் துருவ தியானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தீமைகள் நடக்கிறது என்றால் அது நடக்காமல் தடுத்து நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

அதைச் சேர்க்கப்படும் பொழுது பிறிதொரு தீமை நம்மை இயக்காதபடி அதை அடக்கிச் சிந்திக்கும் தன்மை வரும்.

அப்பொழுது...
1.அந்தத் தீமை செய்பவர்களுக்கு எப்படிச் சொல்ல வேண்டும்...? என்ற ஞானமும் கிடைக்கும்.
2.அதை அவர்கள் எற்றுக் கொள்ளும்படியான சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பருவமும் நமக்குள் வரும்.  

உதாரணமாக நாம் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக வேகாமல் தாளித்தால் எப்படி இருக்கும்...? சரியான முறையில் வெந்து இறக்கப்படும் பொழுது அதைச் செய்தால் அது ருசியாக வரும்.

காய்கள் வேகப்படும் பொழுது வேகுவதற்கு முன்னாடி அதிகமான உப்பைச் சேர்த்து விட்டால் சில காய்களும் அதனுடன் இணையும் தன்மையைப் பிரித்துவிடும். உப்பு அதிகமாகிவிடும். குழம்பின் ருசி மாறிவிடும். இந்த மாதிரிச் சிலர் குழம்பு வைத்தார்கள் என்றால் ருசியே மாறிவிடும்.

1.பருவம் தெரியாதபடி உப்பைக் கலப்பதனால் குழம்பின் ருசி மாறிவிடும்.
2.அந்தப் பருவம் இதனுடன் இணைந்திடும் சந்தர்ப்பம் வரும் பொழுது உப்பை நாம் கலக்கலாம்.

சில மசால்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கப்படும் பொழுது அந்தச் சூட்டிலே சமமாகப் போய்ச் சேரும். ஆனால் இந்த உப்பென்ற நிலைகள் வரும் பொழுது முன்னணியில் இருந்து தடுத்துவிடும்.

அது தடுத்து விட்டால் அந்தக் காய்கறிகள் ருசி இருக்காது. உப்பு தான் முன்னாடி இருக்கும். குழம்பின் நிலைகள் மாறிவிடும். இவைகள் எல்லாம்
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் செய்யக்கூடிய உணர்வுகள் எதுவோ
2.அது கலப்பதற்குத் தகுந்த மாதிரித்தான் அந்த ருசி வரும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்... என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது...!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.