ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2019

நம் முன்னோர்களை விண் செலுத்தும் மார்க்கம்


ஒரு நூலுக்கு வலு குறைவு. பல நூலை ஒன்றாகத் திரித்து, கயிறாக மாற்றும் பொழுது அதனின் வலு கூடுகின்றது. இதைப் போன்று
1.நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வின் வலிமையை நமக்குள் ஏற்றிக் கொண்டு
2.நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும். 
4.அப்படியில்லாது நாம் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வதற்கு வேறு மார்க்கம் கிடையாது.

எவருக்கோ காசு கொடுத்து, முன்னோரை மோட்சத்திற்கு அனுப்புவேன் என்றால் அது முடியாது...!” நீங்கள்தான் உங்கள் உணர்வின் துணை கொண்டு, அருள் ஞானிகள் காண்பித்த அருள் வழி கொண்டு மூதாதையர்களின் ஆத்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

ஒருவர் உங்களுடன் வாழ்ந்து பின் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் ஒன்றிலிருந்து  நாற்பத்தி எட்டு  நாட்களுக்குள் அந்த ஆன்மாவைக் குறித்து மகரிஷிகளின் அருள் உணர்வின் துணை கொண்டு அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தல் வேண்டும்.

ஒரு இராக்கெட் உந்து விசையின் ஆற்றலால் விண்ணில் தன் எல்லையை அடைகின்றது. பின் அங்கிருந்து தான் கவரும் உணர்வுகளைத் தரை மார்க்கத்திற்கு அனுப்புகின்றது. 

நட்சத்திரங்கள் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து பெருக்கி விஷத் தன்மை கொண்ட கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும் வல்லமை பெற்றது. இப்படி உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் மற்ற பொருள்களுடன் கலந்து புவிக்கு வருகின்றது. இவைகளைத்தான் விஞ்ஞானி பிரிக்கின்றான், சக்தி வாய்ந்ததாக இணைத்து இராக்கெட்டில் ஏவுகின்றான்.

உணர்வின் அதிர்வுகளில் இருக்கும் மின்னணுவின் கதிர்களைத் தனியாகச் சேமிக்கின்றான். உணர்வின் அதிர்வுகளை அதற்குள் இணைக்கின்றான்.

1.எப்படி  மின்னல் ஒளியாக்கும் உணர்வுகளை பூமிக்கு அழைத்து வருகின்றதோ
2.இதைப் போன்று அது இயக்கும் தன்மை கொண்டு இங்கே ஈர்க்கப்பட்டு
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு விண்ணின் ஆற்றலை அறிகின்றான் விஞ்ஞானி.

இதைப் போன்றுதான் நம்முடைய முன்னோரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும். ஆனால் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் போக முடியாது.

முதலில் உங்களிடத்தில் அருள் ஞானத்தின் நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும். அதனின் உணர்வாக ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதன் உணர்வின் வலுவின் துணை கொண்டு நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை,

நாம் தொடர்ந்து தியானிப்பதன் மூலம், அந்த உயிரான்மா இன்னொருவரின் உடலை விட்டு வந்தபின் விண் செலுத்தி, இன்னொரு உடல் பெறாத நிலைகளை உருவாக்கலாம்.

இன்றைய நிலைகளில் முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தியபின்,  அதன் வழித் தொடர் கொண்டுதான் நாம் விண்ணின் ஆற்றலைப் பெற முடியும். 

1.மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்திய பின்
2.அதன் உணர்வின் துணை கொண்டு உங்கள் குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு
3.அருள் ஞானியின் உணர்வை  உங்களுக்குள் துணை கொண்டால்,
4.உங்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது உங்களுடைய உயிர்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை யாம் உங்களுக்குள் பதிவு செய்ததன் நிலை கொண்டு அருள் மகரிஷிகளின் அருளை எண்ணி உங்களுடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள்.

உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்யுங்கள். நம்முடைய முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தலையாயக் கடமை அது...!