ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2019

நாம் செல்லும் ஞானப் பாதையில் உயர்வு பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?


குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் செல்லும் பொழுது அன்று சோறு கிடையாது.
1.குருநாதர் உபதேசம் சொல்லும் பொழுதெல்லாம் அதைக் கூர்ந்து கேட்டுக் கொண்ட இருக்க வேண்டும்.
2.சிறிது திரும்பினாலும் அடி விழும்.. கவனம் அவர் பக்கம் போகும்…!

உங்களிடம் கொக்கி என்ன போட்டிருக்கின்றோம்..? என்றால் உங்களின் எதிர்பார்ப்பை வைத்து இழுத்து வைத்திருக்கிறேன். காந்தத்தை வைத்து இழுத்து வைத்திருப்பதால் அந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வர முடிகின்றது. இல்லையென்றால் கொண்டு வர முடியாது.

மற்ற கூட்டங்களில் மற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பார்த்தால், “ஆகா...!” என்று ஒருவர் கைதட்டுவார். இந்தப் பக்கம் இவர் என்ன செய்கின்றார்...? என்று பார்ப்பார்கள். ஒரு சொல் வந்தவுடன் ஆகா...!” என்பார்கள். அடுத்தவர் கேட்பதையும் தடைப்படுத்துவார்கள்.

இதுவெல்லாம் நமது வாழ்க்கையில் எது நம்மை மாற்றி அமைக்கின்றது...? அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்...? என்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களிடம் கொடுக்கின்றோம்.

அதிகாலை நான்கு மணிக்குச் சில முக்கியமான உணர்வுகளை அனுப்புகின்றேன். அனுப்பும் பொழுது அதை எப்படியும் பெற வேண்டும் என்று எண்ணுகின்ற பொழுது அந்த உணர்வுகள் தெரிய வரும்.
1.“சாமி...நம்மை எங்கே கவனிக்கின்றார்...?
2.மற்றவர்களைத் தான் கவனிக்கின்றார்...! என்று நினைத்தீர்கள் என்றால்
3.உங்களுக்குக் கிடைப்பதை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

எல்லோரும் மெய் ஞானம் மெய் ஒளி பெற வேண்டும்...! என்ற ஐக்கிய உணர்வு கொண்டு ஒளியானவர்கள் தான் மகரிஷிகள். அவர்கள் வளரும் ஒளிகள்.
1.மகரிஷிகள் எல்லோருடைய துணை கொண்டுதான் ஒளியாக ஆனார்கள். ஏன் நாம் ஆக முடியாதா...?
2.மற்றவர்களுக்குத்தான் கொடுத்தார். எனக்குச் சாமி கொடுக்கவில்லை என்று பிரித்து விட்டால் என்னவாகும்...?
3.எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் யாம் செய்கின்றோம்
4.அவர்களுக்குக் கிடைக்கின்றதுஏன்... நமக்கும் கிடைக்கும்…! என்று தான் நினைக்க வேண்டும்.
5.எல்லோரும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது தான் நாமும் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

நாம் ரேடியோ டிவியை எங்கெங்கு திருப்புகின்றோமோ எந்தெந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைவரிசை கிடைக்கின்றது.

அதே போல நாம் அந்த மகரிஷியின் உணர்வைப் பதிவு செய்திருக்கின்றோம். அந்த மகரிஷிகள் அவர்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்று எண்ணும் பொழுது
1.இதைக் காட்டிலும் அதிகமாக அவர்களுக்குக் கிடைக்கும்
2.உங்கள் துணை வைத்து அவர்கள் எண்ணும் பொழுது இந்த வலு அவர்களுக்குக் கிடைக்கின்றது.
3.நீங்கள் இங்கு பெறுகின்றீர்கள்உங்களுக்குக் கிடைக்க வேண்டும்...! என்று அவர்கள் தியானிக்கும் பொழுது அவர்கள் அங்கே பெறுகின்றார்கள்.

சூரியன் தனித்துப் பிரகாசமாகவில்லை. அது போல் மகரிஷிகள் தனித்து ஒருவர் பிரகாசம் ஆகவில்லை. எல்லோருடைய உணர்வையும் ஒன்றி ஐக்கியமாக்கி அந்த எண்ண அலைகளை வைத்த்துத்தான் ஒளியாக ஆனார்கள்.