ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2017

அனைவரும் மகிழ்வதைக் கண்டு “நீ அருள் பேரானந்தப் படவேண்டும்.., உன்னில் காண்… உன்னில் நீ பார்… உன்னை நீ பார்…” என்றார் குருநாதர்

பிறர்படும் துயரங்களிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என்று நாம் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் ஆற்றலே தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் சக்தியாகும்.

உன்னில் வந்த தீமைகளை அகற்ற பல முறை உன்னைச் சோதித்தேன். தீமைகள் எவ்வாறு சாடுகின்றதென்றும் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தையும் உன்னிலே பாய்ச்சுகின்றேன் என்றார் குருநாதர்.

இந்த உணர்வின் துணை கொண்டு நீ விண்ணின் ஆற்றலை எப்படிப் பருகுகின்றாய்? இந்த மண்ணுலகில் உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய்? என்ற உணர்வினை

1.“உன்னில் காண்,

2.“உன்னில் நீ பார்,

3.“உன்னை நீ பார்

என்ற இந்த உணர்வினை குருநாதர் உபதேசித்து அந்த உணர்வின் வழிப்படி எமக்குள் பதிவாக்கி இந்தப் பேருண்மையை எமக்குள் வளர்க்கும் திறனைப் பெருக்கினார்.

அத்தகைய உணர்வின் ஆற்றலைத்தான் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

இந்த உணர்வினை நீங்கள் எண்ணத்தால் வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற அருள் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கிடும் சக்தியை உங்கள் உயிரே உருவாக்குகின்றது.

நீங்கள் எண்ணியது எதுவோ அதன் வழிப்படி உங்கள் உயிர் அதை உருவாக்குகின்றது. நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ இந்தக் கண்கள் அதை வழி நடத்துகின்றது.

ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அதனின் உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கிவிட்டால் தீமை செய்கின்றான் என்று உணர்கின்றோம். அதன் அணுவாகவே நமது உடலில் உருவாகிவிடுகின்றது.

ஆகவே அத்தகைய தீமை செய்யும் அணு நமக்குள் உருவாகி விட்டால் அதனின் உணவுக்காக அது உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்போது நம்மை அறியாமலேயே நாம் தீமை செய்வோராக ஆகி விடுகின்றோம். தீமையை செய்யும் சக்தியின் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை

2.நீங்கள் கேட்கும் பொழுதும் இதைக் கூர்ந்து கவனித்துப் படிக்கும் பொழுதும்,

3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை பெறும்போது

4.அதை உங்களுடைய கண்கள் உற்றுப் பார்த்து உணர்வினை நுகரச் செய்து

5.உணர்வின் தன்மையை அணுவாக்கி  உங்கள் உடல்களில் நல்ல உணர்வின் அணுக்களைப் பெறச் செய்வதற்கே

குருநாதர் காட்டிய அருள் ஒளியை யாம் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் – அவர் கண்ட பேருண்மையையும் அகண்ட நிலையும் அவருக்குள் கண்டறிந்த உணர்வினை,

1.நான் கண்ட உண்மையின் உணர்வை உனக்குள் உணர்ந்து கொள்

2.உன்னை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீ விடுபடு

3.அந்த உண்மையின் உணர்வை நீ உனக்குள் பெருக்கு

4.ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளில் இதைப் பெருக்கு

5.அதன் உணர்வினை இந்த  நாட்டிலே பெருக்கு

6.அதைக் கவர்ந்தோர் உணர்வுகளிலே இருள் நீங்கி மெய்ப் பொருள் காணும் சக்தி பெறட்டும் என்பதற்கே

7.“உன்னில் இதைப் பதிவு செய்கின்றேன் என்று இதைச் சொன்னார்.

இவ்வாறு அவர் எமக்குள் பதிவு செய்ததை யாம் நினைவு கொண்டு உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

அவர் சொன்ன உணர்வினை யாம் வெளிப்படுத்தும் பொழுது இந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இந்த உணர்வுகளை நீங்கள் அனவரும் திரும்பத் திரும்பக் கேட்டு உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

அப்படிப் பதிவாக்கும் பொழுது அன்று “வான்மீகி மகரிஷி கண்ட உண்மைகளையும் அன்று “வியாசக பகவான் கண்டுணர்ந்த உண்மைகளையும் இதற்கு முந்தி அன்று “துருவ மகரிஷி கண்டுணர்ந்த உண்மைகளையும் நீங்கள் “தொடர் வரிசையில் காணலாம்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும் நாம் பெற்றால் இருளை உருவாக்கும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனி பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

நாம் அடைய முடியுமென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி

1.உங்களுக்குள் பதிவாக்கி நீங்களும் அதை நினைவாக்கி

2.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் பெருக்கும்போது

3.அதைக் கண்டு யாம் மகிழ்ச்சியடைந்து அதனை மீண்டும் எமக்குள் பெருக்கி

4.உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்டி

5.அருள் ஒளியை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வினை வெளிப்படுத்தி

அந்த உணர்வைக் கண்டு ஒவ்வொருவரும் மகிழ்வதைக் கண்டு “அருள் பேரானந்தப் படவேண்டும் என்று குருநாதர் காட்டினார்.