ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2017

விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணர் கடவுளை எப்படிக் காட்டினார்...?

நமது உயிர் கடவுளாக நின்று இயக்கினாலும் நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அதுவே நமக்குள் கடவுளாக நின்று நம்மை இயக்குகின்றது.

இந்தப் பேருண்மையைத்தான் அன்று இராமகிருஷ்ண பரமகம்சரும் எடுத்துச் சொன்னார்.

“கடவுளைப் பார்க்க வேண்டும்..,” என்ற மிகுந்த வேட்கை கொண்டவர் விவேகானந்தர்.

தான் கல்விச் சாலையில் படித்தாலும் அன்று பக்தி மார்க்கங்களில் உள்ள நிலைகள் கொண்டு கடவுளை அறிய வேண்டும் என்று அவருடைய வீரிய உணர்வுகள் கொண்டு பல நிலைகள் எடுத்தாலும் அவருக்குச் சரியான “விடை” கிடைக்கவில்லை.

பித்தரைப் போன்று இருக்கும் இராமகிருஷ்ண பரமகம்சரிடம் செல்பவர்களுக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது என்று அறிந்த பின் அவரை அணுகுகின்றார் விவேகானந்தர்.

கடவுள் என்பது எப்படி இயக்குகின்றது என்று அவருக்குள் (பரமகம்சர்) அறிந்த சக்தியின் தன்மை கொண்டு
1.விவேகானந்தர் தன்னைத் தேடி வருகின்றார் என்பதை உணர்ந்து
2.தான் படுத்திருக்கும் இடத்திற்குக் கீழ் முட்களையும் வேதனைப்படுத்தக்கூடிய சில பொருள்களையும் பாய்க்கு அடியில் போடுகின்றார் இராமகிருஷ்ணர்.

இதை உற்றுப் பார்த்தபின் விவேகானந்தர் கேட்கின்றார். இது… என்ன..?” முட்கள் போட்டிருக்கின்றது.., இதன் மேல் உட்கார்ந்திருந்தால் வலிக்கவில்லையா…!

அப்பொழுது பரமகம்சர் சொல்கின்றார். (எனக்கு) “வலிக்கின்றது” என்று நீ நினைக்கின்றாய்.
1.நான் இதைப் பார்க்கவில்லை..., அதனால் எனக்கு வலிக்கவில்லை.
2.எனக்கு வலி தெரியவில்லை என்கிறார்.
3.அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தினால் தான் “எனக்குள் அது இயக்கும்” என்று விவேகானந்தருக்கு உணர்த்துகின்றார்.

பின், அவரைத் தொட்டுக் காட்டுகின்றார். அவர் உடலைத் தொட்டபின் அந்த உணர்வுகள் விவேகானந்தருக்குள் பாய்ந்தபின் சில உண்மையின் நிலைகளை உணர்கின்றார்.

உனக்குள் நின்று இந்த உணர்வின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றது என்று ஆக “இது தான் கடவுள்”.

1.என்னை முள் குத்தும் என்று நீ எண்ணுகின்றாய்
2.அந்த உணர்வின் சக்தி உன் உயிரின் தன்மை
3.அது உள் நின்று அது உணர்த்துகின்றது.
4.அந்த உணர்த்திய சக்தி உனக்குள் வந்த பின் “வேதனைப்படுவேன்.., என்று உணர்த்துகின்றது”. இது தான் கடவுள்.
5.நீ எண்ணியது எதுவோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு உள் நின்றே அது உணர்த்துகின்றது.
6.இவ்வாறு தான் கடவுள் அது செயலாக்குகின்றான் என்ற நிலையை அன்று விவேகானந்தருக்கு தெளிவுபடுத்திக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

கடவுளின் செயலாக்கங்கள் - உன் உயிர் எவ்வாறு உள் நின்று இயக்குகின்றதோ அதைப் போல எனக்கு வேதனை என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை உனக்குள் நின்று வேதனை என்ற உணர்வை உணர்த்துகின்றது.
1.கடவுளின் இயக்கம் இதுதான்.
2.கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.

உனக்குள் இருந்து உயிர் இயக்கினாலும் அவனை நீ காணமுடியவில்லை. உனக்குள் பல கோடி குணங்கள் இருப்பினும் அதனை நீ காண முடியவில்லை.

நினைவின் ஆற்றல் வரும் பொழுது தான் உனது ஆன்மாவாக மாறுகின்றது. நுகர்ந்தபின்தான் உன் உயிரின் இயக்கங்கள் இவ்வாறு இயக்குகின்றது என்று தெளிவுபடுத்தினார் இராமகிருஷ்ண பரமகம்சர்.

அதன் பின் தான் அப்பொழுது அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு தான் அன்று விவேகானந்தர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்தார்.

நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அதையே நமக்குள் படைக்கின்றது என்றும் இதைப் போல நாம் எண்ணிய உணர்வுகள் எப்படி வினை என்ற நிலைகளையும் அந்த வினைக்கு நாயகனாக எந்த நிலைகளை இயக்குகிறது என்ற நிலைகளையும் உணர்ந்து கொண்டார் விவேகானந்தர்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட நிலையில் தான் சிகாகோவில் சகோதர சகோதரிகளே என்று தன்னுடன் இணைத்து (மிஸ்டர்… அது… இது… என்று சொன்னாலும்) வெளிப்படுத்திக் காட்டினார்.

“சகோதர சகோதரிகளே” என்று தன் குரு தனக்கு உணர்த்திய வழியைத் தனக்குள் இணைத்து அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மேலை நாட்டில் “கடவுளின் அவதாரம்” என்ற நிலைகளையும் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் தாயார் கணவன் இல்லாமல் பிறந்தது என்ற நிலைகளை அவர்கள் பறை சாற்றிய நிலைகளை இது பொய்மை என்று மறைமுகமாக எடுத்துக் காட்டினார்.

நெகடிவ்.., பாசிடிவ்.., - ve.., + ve.., என்ற இயக்கம் இல்லை என்றால் இந்த உலக இயக்கம் இருக்காது.

ஒரு மனிதன் நல்ல நிலைகளில் இயக்கப்படும் பொழுதுதான் மற்றவர்களுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு மற்றவன் தீமை செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.

அப்படி உணர்த்தினாலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நல்ல உணர்வு கொண்டு இயக்கினால் தான் அந்தத் தீமைகளை அகற்ற முடியும். இதையெல்லாம் அங்கே உணர்த்துகின்றார் விவேகானந்தர்.

சிகாகோவில் அவர் பேசிய உபதேசங்கள் ஆங்கில வடிவில் பேசினார். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தமிழ் வடிவில் எனக்கு உபதேசித்தருளினார்.

நான் (ஞானகுரு) எந்தப் புத்தகங்களையும் படித்து இதைச் சொல்லவில்லை.

விவேகானந்தர் தன் குரு காட்டிய வழியினை அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். நம் நாட்டின் பெருமையை அங்கே நிலைநாட்டினார்.

1.“ஆச்சாரம்… அனுஷ்டானங்கள்..,” என்பதை நீக்கிவிட்டு
2.நாம் அனுஷ்டிக்க வேண்டிய முறைகள் எது
என்ற தத்துவத்தைத்தான் விவேகானந்தர் அங்கே தெளிவாக எடுத்துரைத்தார்.

1.ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் நம்மைக் காக்காது.
2.”நாம் அனுசரித்து நடக்கக்கூடிய ஆச்சாரம்… எதுவோ…,” அது தான் வழி நடத்தும்.

ஒரு மனிதன் பிழையானதைச் செய்கின்றான் என்றால் அந்தப் பிழை நமக்குள் ஓங்கி வளரப்படும் பொழுது நமக்குள்ளும் அந்தப் பிழைகள் வளர்கின்றது.


அந்தப் பிழையான நிலைகள் அங்கே உருப்பெறுவது நீங்க வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்தப் பிழை நமக்குள்ளும் நீங்குகின்றது. அவன் அறியாது செய்யும் பிழைகளையும் நீக்க முடியும் என்ற இந்தத் தத்துவத்தை இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிப்படுத்தினார்.