ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2017

நம் மூதாதையர்களை “சப்தரிஷிகளாக” ஆக்க வேண்டும் – ஆக்க முடியும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரியும் முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அங்கே அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டு பிறவா நிலை எண்ணும் அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

சிலர் கேள்விகள் கேட்கலாம், எங்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்று பல காலம் ஆகிவிட்டது. “எப்படிச் செலுத்துவது முடியுமா?” என்று எண்ணலாம்.

1.அவர்கள் பகைமை கொண்டிருந்தால் பகைமை கொண்டவர் உடலுக்குள் சென்றிருப்பார்கள்.
2.பாசத்துடன் வாழ்க்கையில் சென்றிருந்தால் பாச உணர்வு கொண்ட உடலுக்குள் சென்று பேயாக உருவாகி அங்கே நோயாக உருப்பெறச் செய்வார்.
3.அதே சமயத்தில் துர் மரணம் அடைந்து எந்தப் பக்தியுடன் சென்றதோ அத்தகைய பக்தி கொண்ட உடல்களில் சென்றிருக்கும்.
4.இதைப் போன்ற நிலைகளில் ஆன்மாக்கள் அந்த உடல்களை விட்டு வெளி வந்தபின் அதைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சாதாரணமாக அதனின் இரத்த சம்பந்தம் உள்ள அவரைப் பற்றி எண்ணுபவர்கள் இருக்கும் வரை கடைசி நிலைகளில் எந்த உணர்வை அதிகமாக எண்ணியிருந்ததோ அந்த இடங்களில் தான் சுழன்று கொண்டிருக்கும்.

குறைந்தது மற்றொரு உடல் பெறுவதற்கு அதனுடய முந்தைய நிலைகள் மறக்கப்பட்ட பின் 150-200 ஆண்டுகளுக்குப் பின் தான் மறு (புதிய பிறப்பு) உடல் பெறும்.

(ஆனால், மிருக உடல்களுக்குள் சென்றிருந்தால் விண் செலுத்த முடியாது)

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ  நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும்
நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

அவ்வாறு தியானித்த அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் எளிதில் செலுத்திவிடலாம்.

நாம் உடலுடன் உள்ளோம். அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது. இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வே உங்கள் உடல். இதைப் போன்று தினசரி தியானித்து அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அங்கே இணைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் இருக்கும் இன்னொரு உடல்களிலிருந்து அது எந்த நேரம் வெளி வரும் என்று சொல்ல முடியாது. நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் அங்கே அந்த ஆன்மாவில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

அப்படி வெளியேறிவிட்டால் இதைப் போன்று நாம் தியானித்ததன் வலு இருந்தால் மறுபடி இன்னொரு உடலுக்குள் போகாதபடி நாம் விண்ணிலே செலுத்த முடியும்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க முடியும். பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாக மீண்டும் மற்றொரு உடலுக்குள் போகாது தடுக்க முடியும்.

நாம் நமது மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் தான் நாம் அங்கிருந்து எளிதில் சக்திகளைப் பெற முடியும்.

இந்த வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். நமக்குப் பின் நம் குழந்தைகள் நம்மை விண் செலுத்துவார்கள்.

அன்றைய ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடையலாம். சாஸ்திரப்படி இது தான் ஞானிகள் சொன்னது.

அதை விட்டு விட்டு சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஆற்றிலேயும் கடலிலேயும் கரைத்தால் அதனால் எதுவும் பலன் இல்லை.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.
2.நமக்குச் சொந்தமானது உயிர் ஒன்று தான்.
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுவதே அழியாதது. அதுதான் வேகா நிலை.
4அப்படி அடைந்தவர்கள் சப்தரிஷிகள் இன்று சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

5.நம் முன்னோர்களை நாம் சப்தரிஷிகளாக ஆக்க வேண்டும்.