ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2017

“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே “ஒளியாக வேண்டும்”

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வரக்கூடிய துயரங்களையும் சங்கடங்களையும் நமக்குள் வராதபடி ஒவ்வொரு நிலைகளிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டே வந்தால் இது விஷ்ணு தனுசாகின்றது.

1.விஷமென்ற நிலைகள் சிவ தனுசு தாக்கிவிட்டால் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.

2.அருள் ஒளி என்ற உணர்வை எடுத்தால் இன்னொரு உடல் பெறுவதில்லை.

3.உயிருடன் சேர்த்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெறுகின்றது,

4.அதுதான் விஷ்ணு தனுசு.

சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழிவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் அழியாது.

இந்தப் பிரபஞ்சம் ஏகமாக ஒளியின் சரீரமாக மாற எத்தனையோ கோடி ஆண்டுகளாகும். ஆனால், இப்பொழுது மனிதனாகி ஒளியாகின்றது.

முதலில் இருண்ட உலகமாக இருந்தது. அது கோள்களை உருவாக்கி மனிதனானபின் இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஒளி என்ற நிலை அடைகின்றது.

அது என்றும் ஏகாந்த நிலை.., “பெருவீடு பெரு நிலை நாம் வளர்ந்து கொண்டே போகலாம்.

கூட்டுத் தியானங்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் இந்த பூமி முழுவதும் படருகின்றது. அதே சமயத்தில் இந்த உபதேச உணர்வுகளைப் படிப்போர் அவர்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் மீண்டும் இதை எண்ணும்போது அந்த அருள் உணர்வுகளும் படர்கின்றது.

1.இத்தகைய அருள் உணர்வுகள் ஒவ்வொரு நாளும் கூடக் கூட

2.மனிதர்கள் வெறித்தனமாகவும், சங்கடமான நிலைகளில் வாழ்வதும் குறையும்.

3.அதே சமயம், துருவ நட்சத்திரம் நம்மை ஒளி உடல் பெறச் செய்யும்.

நம் வாழ்க்கையில் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்தாலும், நம்முடன் வரப்போவதில்லை. ஆகவே, அருள் உணர்வுடன் பிறவியில்லா நிலை அடைவதுதான் கடைசி நிலை.

அந்த அகஸ்தியன் வழியில் வந்தவர்கள் அநேகம் பேர்கள் உண்டு. இதைத்தான் அன்று இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியுள்ளார்.

1.நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது.

2.இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்.

3.“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை நீ உயிராக இருக்கின்றாய்,

4.என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று என்று பாடியுள்ளார்.

நம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது. நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.

நீ ஒளியாக இருப்பது போல் என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.

1.பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.

2.பிறருக்கு நல்லது செய்யக் கூடிய உணர்வே எனக்குள் வரவேண்டும்.

3.அந்த “அருட்பிரசாதம்..,” இல்லை என்று சொல்லாதபடி

4.என்றுமே பசியை ஆற்றக் கூடியநிலை (சாப்பாட்டுப் பசி அல்ல) அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

5.இருளிலிருந்து விடுபட்டுப் பெரும் ஜோதியாக பேரொளியாக மக்கள் அனைவரும் ஏகாந்த நிலை பெறவேண்டும்.

6.(அதை) யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது.


7.எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளை நான் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான் அவர் பாடல்களில் பாடியுள்ளார்.