ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2017

கடவுள் எங்கே இருக்கின்றார்..?

1.நாம் பிள்ளையார் சுழி போட்டுதான் கணக்கு எழுதுவோம்;
2.பிள்ளையார் சுழி போட்டுதான் நாம் வீடு புகுவோம்;
3.பிள்ளையார் பூஜை செய்தபின்தான் எல்லா வேலையும் செய்வோம்;
இதற்குத் தான் நாம் தெரிந்திருக்கின்றோம்;

இந்தப் பிள்ளை யார்...? கேள்விக்குறி வைத்திருக்கின்றோம். பிள்ளையார் - என்று கேள்விக் குறியைப் போட்டு வைத்திருக்கின்றார்கள்.

யானைத் தலையைப் போட்டு மனிதனை வைத்து முன்னாடி எலியை வைத்து இந்தப் பிள்ளை யார்?

மஞ்சளில் பிள்ளையார் வைத்திருக்கின்றோம்; மாட்டுச் சாணத்தில் பிள்ளையாரைச் செய்து வைத்து இரண்டு அருகம்புல்லைக் குத்தி வைத்து “நீதான்டா பிள்ளையாரப்பா.., என்னைக் காப்பாற்றப்பா..,” என்று சொல்கின்றோம்.

ஏன்...! நாம் நம் பிள்ளையின் மலத்தை (நாம் சுவையாகச் சாப்பிடும் லட்டு, ஜிலேபி, பால் மற்றும் வாசனை போட்டதையெல்லாம் சாப்பிடுகிறது நம் குழந்தை) எடுத்து பிள்ளையாராக வைத்துக் கும்பிடுங்கள், பார்க்கலாம்.

பக்தி கொண்டு நாம் பிள்ளையாரை வைத்துக் கும்பிடும் போது, பிள்ளை தெரியாமல் எச்சில் பண்ணிவிட்டால் "சனியனே.., தொலைந்து போ..," என்று போட்டு “சாத்து…சாத்து…” என்று சாத்துகின்றோம்.

பிள்ளையின் மேல் பிரியம் இருக்கும்.

அந்த நேரத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது, அது வெளிக்கோ ஒன்றுக்கோ போய்விட்டது என்றால் "சனியனே.., தொலைந்து போ..," இந்த நேரத்திற்கு வந்தது பார்.., என்றும் "தூ.., என்று வீசி எறியடா” முகத்தில் என்கின்றோம்.

சாமி கும்பிடுகிற “பக்தி” இது.

ஆனால் நாம் மாட்டினுடைய சாணத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றோம். அந்தச் சாணத்தை வைத்து பிள்ளையாரைச் செய்து, "பிள்ளையாரப்பா… என்னைக் காப்பாற்றப்பா…" என்று சொல்கின்றோம்.

அப்பொழுது “கடவுள்” எங்கே இருக்கின்றார்?

1.நாம் எண்ணும் எண்ணத்திற்குள் இறைவனாக இருக்கின்றார்.
2.அந்த இறையின் உணர்வு செயலாகும் பொழுது தெய்வமாக இருக்கின்றது.
3.இந்த உறைந்த உணர்வுகள் சிவமாக இருக்கின்றது.
4.சிவத்திற்குள் உருவாக்கியது உயிராக இருக்கின்றது.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

ஏனென்றால் நாம் அகஸ்தியன் காட்டிய அறநெறிகளில், நாம் நம்மை, "நாம் யார்…? இந்தப் பிள்ளை யார்…?" என்று கேள்விக்குறி போட்டு வைத்திருக்கின்றோம்.

1.நீ உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை.
2.நீ சிந்தித்துப் பார் என்று
3.நம்மை நாம் அறிந்திட.., “தன்னைத்தான் அறிதல்” என்ற நிலைக்கு
அன்று அகஸ்தியன் காட்டிய பேருண்மைகள் இவை.

தன்னை அறியாது “யாரோ செய்வார்.., எவரோ செய்வார்…!” என்ற நிலையில்லாது
1.உள் நின்று இயக்கும் உன் உயிர்தான் “கடவுள்”,
2.உயிரால் உருவாக்கப்பட்ட உன் உடல் “ஆலயம்”
என்பதைக் காட்டுவதற்கே ஆலயத்தை அமைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

நேற்றைய செயல் இன்றைய மனித சரீரம். இன்றைய செயலாக அருள் மகரிஷிகளின் உணர்வை உனக்குள் சேர்த்து நாளைய சரீரமாக ஒளிச் சரீரம் நீ பெறவேண்டும் என்ற நிலையை உணர்த்த
1.நீ யார்…?
2.இந்தப் பிள்ளை யார்…?
3.நீ சிந்தித்துப் பார்…!
என்று விநாயக தத்துவத்தில் அங்கே தெளிவாக உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

நம்மை நாம் அறிய முயற்சி செய்திருக்கின்றோமா என்று சிந்தித்துப் பாருங்கள்.