ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 2, 2017

“யாம் தொட்டுக் காட்டவில்லை... பொட்டில் வைக்கவில்லை...” என்று சிலர் கேட்கிறார்கள் - விளக்கம்

எத்தனை கோடிச் செல்வங்கள் இருந்தாலும் அது நம்மை மகிழச் செய்கிறதா! என்றால் இல்லை. செல்வந்தர்களை நாம் பார்க்கிறோம். “பணத்தால் அவர்களால் மகிழ முடிகிறதா என்றால் முடியவில்லை.

தனக்குள் எண்ணத்தால் எடுத்துக்கொண்ட வேதனை மிஞ்சுகின்றது. பணம் அவர்களிடமிருந்தும் வேதனைதான் அவருக்குள் மிச்சமாக இருக்கிறது.

இதைப்போல எத்தகைய செல்வமும் நம்மைக் காக்காது. செல்வம் உறுதுணையாக வேண்டும் என்றால் இருக்கும். ஆனால், காக்காது.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் அது ஒளி பெறும் நிலையிலிருந்து நம்மை என்றென்றும் பிறளாது அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து என்றும் நம்மைக் காத்தருளும்.

பிற தீமைகளில் நாம் சிக்காது உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலைகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.

ஆகவே, அந்த அருள் ஞானியின் உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களில் விளைவிப்பதற்குத்தான் இந்த உபதேசம். மகரிஷியின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பெறுவதற்குண்டான தகுதியை உருவாக்குவதுதான் இப்போது இந்த உபதேசம்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. அதே போல் தனி மனிதன் “ஒருவரால் அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.

அதைப் பெறுவதற்குண்டான தகுதியை அவர்களைப் பற்றிச் சொல்லி அந்தப் பதிவுகளை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைக்கச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களுக்குச் சமமான நிலைகளில் வலுப்பெறுகின்றீர்கள்.
3.அவ்வாறு வலுப் பெறச்செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து கவர்ந்து, எடுக்க வேண்டும்.
4.நாம் கவரப்படும்போது நமக்கு முன் அந்த அலைகள் படர்கின்றது.
5.அப்பொழுது நம் ஆன்மாவில் இது கலக்கப்பட்டு தீமைகளைப் பிளக்கின்றது,
6.அவ்வாறு தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை நுகர்ந்து உள் செல்லச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம்.

என்னமோ, சாமி லேசாகச் சொல்கிறார், என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

1.குண்டலினியைத் தட்டி எழுப்பி
2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்,
3.தொட்டுக் காண்பித்தார்கள் பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்,
4.ஐயோ.., “இவர் ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.

உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச்சக்தியாக மாற்றத்தான் என்னால் என் குரு காட்டிய நிலையில் முடியும்.

தொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ உங்களுக்குள் சொல்லவில்லை.

உதாரணமாக சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.

உங்களுக்குள் அருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்
2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன்
3.உங்களை ஒன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அவர்களுடன் ஒன்றும் நிலை வரும் பொழுது நம் ஆன்மாவில் கலந்த தீமைகளைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் உணர்வாக அது விளையச் செய்யும். நமக்குள் அதை வலுப்பெறச் செய்யும்.

இந்த வலுவின் துணை கொண்டு தான் உடலை விட்டு அகன்று சென்ற நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய முடியும்.

அவர்கள் முன் சென்றால் இன்னோரு உடல் பெறும் உணர்வுகள் அங்கே கருக்கப்படுகின்றது, கருகியபின் அது ஒளியின் உணர்வாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறுகின்றது.

ஏனென்றால் அவரின் உணர்வின் தன்மை பெற்றது தான் நமது உடல். அவர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் நாம் உந்திச் செலுத்தும் பொழுது அவர்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறார்கள்.

அதே சமயம் அவர்கள் மூலம் விண்ணின் ஆற்றலை எளிதில் நாம் கவர முடிகிறது. அதன் வழியில் நம் வாழ்க்கையில் வரும் தீமையைத் துடைக்க முடிகின்றது.


அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகள் நமக்குள்ளும் இருள் நீக்கும் அந்த உணர்வாக விளைகின்றது. அதைப் பற்றுடன் பற்றும்போது நமது எல்லையும் “சப்தரிஷி மண்டலமாகஅமையும்.