ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2024

கல்கி அவதாரத்தில் வரப் போகும் “சித்தன்”

கல்கி அவதாரத்தில் வரப் போகும் “சித்தன்”

 

உன்னையே நீ உணர்ந்து கொள் மற்றவர்களின் புகழுக்காகவும் வேடிக்கைக்காகவும் அல்ல தியானம்.

காட்சி:-
உருண்டைப் பந்து - உலகம் - சுற்றி வெளிச்சம். இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் கலியுகம் வெளிச்சம்…!

ஒவ்வொரு அவதாரத்தின் போதும் உலக நிலை மாறி இருந்தது. வர இருக்கும் கல்கி அவதாரத்தில் காலநிலை மாறும். ஒவ்வொரு அவதாரத்திலும் நடந்து நிலையைத் தனித்துப் பிரித்துச் சொல்கின்றேன்.

இராமாவதாரத்தைப் பற்றி சாமி சொன்னது புரிந்ததா…?

காட்சி:-
குருநாதர் தன் நெஞ்சைப் பிளந்து காட்டுகின்றார். நெஞ்சுக்குள் உருவம் தெரிகின்றது. இராமர் தசரதரின் மகனாகப் பிறந்தார் வில்லை ஒடித்துச் சீதையை மணந்தார் தந்தையின் சொல்லுக்காக 14 வருடம் காட்டிற்குச் சென்றார் சீதையின் கற்பைச் சோதிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வைத்தார் என்பதெல்லாம் “வால்மீயால் இராமாவதாரம் நடக்கும் காலத்தில் எழுதப்பட்ட கதையே…”

இராமாவதாரத்தில்
1.ஜனங்களுக்குத் தெய்வ பக்தியும் தந்தை சொல் தட்டாத நிலையில் நற்குணமும் பண்பு பற்று பாசம் எல்லாம் நிறைந்து இருந்தது.
2.மனிதர்களும் சூது வாது அற்றவர்களாக இருந்தார்கள்.
3.இராமாவதாரம் நடக்கும் பொழுது புனிதத் தன்மை இருந்தது.
4.அப்போது இருந்த காலத்தில் மாமிசம் யாரும் புசிப்பதில்லை.
5.பிறரின் சந்தோஷத்திற்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் நிலை இருந்தது.

அப்போது இருந்த ரிஷிகளில் ஒருவர் தான் வால்மீகி. அந்த யுகத்துக்குப் பெயர் வைத்தவரும் வால்மீகி தான். இன்னும் அவர் வாழ்கிறார். பிற்கால மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கட்டும் என்று அவர் எழுதிய நூல் தான் இராமாயணம்.

“ஸ்ரீராமஜெயம்” என்று ஜெபிக்கும் பொழுது எந்த நம்பிக்கையோடு ஜெபிக்கின்றோமோ அந்த ஜெபத்தை ஜெயிக்க வைப்பது இராமாயணம் எழுதிய “வால்மீகி தான்…”

அவர் எழுதிய நூலை… அவருக்குப் பிறகு எழுதியவர்கள் அவரவர்கள் மனப்பக்குவப்படிச் சில விஷயங்களைத் திரித்தும்… கூட்டியும்… குறைத்தும் எழுதி விட்டார்கள்.

ஸ்ரீராமஜெயம் எழுதிய பக்தை நீ…! உனக்கு என்றும் ஸ்ரீராமராகவே வால்மீகியின் அருள் கிட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆசி என்றும் உண்டு.

நீ ஜெபித்த ஒவ்வொரு ஜெபமும் என் நெஞ்சில் பதிந்துள்ளது. இது மிகவும் ரகசியம்

இப்போது இருக்கும் ஈஸ்வரபட்டராகிய சற்குருநாதர் யார்…?

படிப்படியாக விளக்கம் சொல்கின்றேன். கலியுகத்தில் ஈஸ்வரபட்டராகவும் அபிராமி பட்டராகவும் இருந்தார். கிருஷ்ணாவதாரத்தில் கீதை உபதேசித்த அந்த ரிஷி யார்…? உன் யோசனைக்கு விடுகின்றேன்.

கீதா உபதேசத்தின் போது வந்த ரிஷி - குருநாதர் தான். இராமாவதாரத்தில் வால்மீகியாக இருந்தார். இன்னும் பல நிலையில் இருந்திருக்கிறார். தொடர்ந்து தியானத்தில் இருந்தால் இன்னும் பல வழிகள் புலப்படும்.

கலியுகம் முடிந்து கல்கி அவதாரம் வரும் பொழுது
1.சாமி சொன்னபடி சித்தன் வெளிப்படுவான் என்றார் அல்லவா… அந்தச் சித்தன் யார் என்பது உங்களுக்குப் புரியும்.
2.ஒரு குழந்தை பிறந்திருக்கிறது 2000 ஆண்டில் அவன் வெளிப்படுவான் என்று சாமி சொன்னார் அல்லவா.
3.அந்தக் குழந்தையின் ரூபத்திலும் “குருநாதர் தான்” சித்தனாக வெளிப்படுவார்.
4.கல்கி அவதாரத்தைப் பார்க்கச் சீக்கிரம் நடை போடு…!
5.“இப்போது நடக்கும் நிலையே கல்கி அவதாரத்தின் ஆரம்பம் தான்…”

மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்… கேலி செய்வார்கள்…!