ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2022

நீர் சக்தி என்ற ஜீவ சக்தியின் முக்கியத்துவம் - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ... அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு...
1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்...! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ... அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.

மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்... செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.

நீரின் சுவையே... ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது... “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி... அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு... செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)

எல்லாச் செயலுக்கும்... காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”

“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே... இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்... இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலை பெற... நம் செயல் இருக்க வேண்டும்.

எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது...?

எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது...?

மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.

அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான... மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்... புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.

இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.

மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.

ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய...
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.

அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட... வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை... இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்... வார்த்தையோடும்... எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.

இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்... வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி...
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை... இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.

அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.

அன்று சித்தர்கள்... ரிஷிகள் எழுதிய காவியத்தில்...
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.

ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்... காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.