ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2022

உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக இன்று வந்து விட்டது

 

இன்று விஞ்ஞான உலகில் ஏற்படுத்தப்பட்ட கொதிகலன்கள் (விஷக் கதிரியக்கங்கள்) சூரியனால் மாற்ற முடியாது. அது எதை எடுத்ததோ சூரியன் அதன் வளர்ச்சியில் அதைத் தான் மாற்றும்.
1.நம் சூரியன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் முதலிலே பெற்றிருந்தது
2.ஆனால் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான கதிரியக்கங்கள் சூரியனுக்குள் கலக்கப்பட்டு
3.அதை மாற்ற முடியாதபடி அந்த விஷத்தையே மீண்டும் உமிழ்த்தும் தன்மை அதிகரித்து விட்டது.

விஷத்தின் தன்மையை நல்லதாக மாற்றும் நிலைகள் அங்கே மாறுபடும்போது விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் (சூரியனை மையமாக வைத்து வேலை செய்யும் சாதனங்கள்) நாளடைவில் செயலிழந்துவிடும்.
1.இந்தச் சூரியனும் செயலிழந்துவிடும்
2.சூரியனால் ஈர்க்கப்பட்ட மற்ற கோள்களும் அது திசை மாறிவிடும்.

இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வெளிப்படும் பொழுது நமது பூமி அதைக் கவர்ந்தாலோ நம் பூமியிலிருக்கும் மனித இனங்களையும் மாற்றிவிடும்.

இவ்வாறு விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

காரணம் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகைய விஷத் தன்மையையும் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது.

உதாரணமாக பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பலவிதமான ஜந்துக்களை விழுங்கி அதனுடைய விஷமும் இதனுடைய விஷமும் ஒன்றாகும் போது பாம்பின் உடலில் ஒளி கொண்ட நாகரத்தினமாக மிளிரச் செய்கின்றது.

இதைப் போன்றுதான் எத்தனையோ வகையான விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
2.நம் உடலுக்குள் அந்த உணர்வின் அறிவாக மாற்றி அறிவின் ஒளியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றி எத்தகைய விஷமும் நமக்குள் வராதபடி அதைப் பேரருளாக மாற்றி அந்த ஏகாந்த நிலை என்ற முழுமை அடைய முடியும்.

மின்னல்கள் கடலிலே தாக்கப்பட்டாலும் அது மணலாக மாறுவதை அதற்குள் இருப்பதை விஞ்ஞானிகள் வடிகட்டி கதிரியக்கப் பொறிகளாக மாற்றிப் பல விதமான அணு ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டார்கள்.
1.உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக வந்து விட்டது
2.அதிலே வெளி வந்த கதிரியக்கங்கள் இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

பூமியிலிருந்து பரவும் அந்தக் கதிரியக்கங்களைச் சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இதைக் கவர்ந்து நமது பிரபஞ்சமே கதிரியக்கமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த விளைவால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்துவிட்டது சிறுகச் சிறுக சூரியனும் செயலிழந்து கொண்டிருக்கின்றது… அது செயலிழக்க நம் பூமியும் செயலிழக்கும்.

பூமியில் வாழும் மனிதனும் அசுர உணர்வு கொண்டு ஒருவரை ஒருவரை ஒருவர் கொன்று தின்னும் நிலை வருகின்றது.

சூரியன் உருவாக்கும் அந்தப் பாதரசமே (வெயில்) கருகிய விஷத் தன்மையாக மாறும் தன்மை சூரியனுக்குள்ளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சூரியன் செயலிழக்கும் தன்மையினால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் அதே நிலை அடைகின்றது.

நான் (ஞானகுரு) வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வைப் பதிவாக்கி நீங்கள் நினைவின் தன்மை கொண்டு வந்தால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் தெளிவாக உணர முடியும். சூரியனின் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய துருவ நட்சத்திரம் என்றும் அழிவதில்லை. எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம்.
1.அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்தி
2.நினைவாற்றலை உங்களுக்குள் கொண்டு வரச்செய்து அந்த நினைவைக் கூட்டி
3.நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் திறனாக உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே பதிவாக்கும் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கூட்டுத் தியானங்கள் இருங்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து இதைச் செயல்படுத்துங்கள்.