ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2022

ஈஸ்வரன்… ஈஸ்வரி…! – சிருஷ்டிக்கும் ஆற்றல்

 

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் சொல்லிச் சொல்லி கணவன் மனைவி இருவருமே ஆத்ம சுத்தி செய்து கொண்டால்
1.இந்த உடலை விட்டுச் சென்றால் வேறு எங்கேயும் போகாது…
2.சிவசக்தி என்ற நிலையில் இங்கே வருகின்றது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது எந்த விண்வெளியை நோக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உணர்வுகளைச் செலுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷியின் எல்லையை அடையலாம்.

மனைவியோ கணவனோ ஒருவருக்கு ஒருவர் யார் முந்திச் சென்றாலும் ஆத்மா இந்த உடலுக்குள் தான் போகும். அப்போது இருவருமே சேர்ந்து எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை தனக்குள் ஒளியாக ஆக்கப்படுகிறது,
1.இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரண்டு எண்ணங்களும் ஒன்று சேர்த்து
2.மெய் ஒளியின் தன்மையைக் கூட்டி உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறுகின்றது.

அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்று உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நம்முடைய குழந்தைகளையும் எண்ணச் சொல்லி உந்தி விண்ணிலே செலுத்தப் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

கூட்டுக் குடும்ப தியானங்களிலும் இதைப்போல செய்து இறந்த உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது இரண்டு நிலைகளாக இருந்தாலும் அது சிவ சக்தியாக ஒன்றாகச் சேர்த்து இன்று எப்படிக் குடும்ப வாழ்க்கையில் இருக்கின்றோமோ இதே நிலையாக ஒளியின் தன்மையை அங்கே வாழ முடியும்.

1.சப்தரிஷி மண்டலமாக ஆனது என்பது… தனித்து எந்த மனிதனும் சென்று உருப் பெற்றதில்லை.
2.கணவன் மனைவியும் இந்த உணர்வின் தன்மை இணைத்துக் கொண்ட நிலைகள் கொண்டு தான்
3.அங்கே சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

எப்படி இருந்தாலும் பெண்களுடைய கரு உணர்வின் தன்மை என்பது ஒரு உயிரின் தன்மை கொண்டு தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்றது.

அதாவது கணவன்-மனைவி சரீரம் இரண்டாக இருந்தாலும்… உயிரின் தன்மை ஆணாக இருந்தாலும்… சக்தி என்ற தாவர இனச் சத்தை இது இரண்டும் சேர்த்துத் தான் உருவமாகிறது. உணர்வின் அணுக்களாகத் திசுக்களாக மாற்றும் நிலை தாவர இனச் சத்தினால் தான் உருப்பெறுகிறது.

1.உயிரின் துடிப்பு ஈசனாக உருவாக்கினாலும்
2.ஈஸ்வரியாக உருவாக்கும் இந்த சக்தியின் தன்மையால் கருவின் தன்மை உருவாகி ஒரு உருவின் தன்மை கொண்டு வரும்.

அதைப் போன்று தான் சூட்சம நிலை பெற்று இந்த மனித உணர்வு வந்தபின்
1.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு கணவன் மனைவி உணர்வின் தன்மை ஒன்று சேர்த்து
2.இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அது ஒளியின் சரீரம் பெற்று
3.இந்த மனித வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோமோ ஒளியின் கூட்டாக அது அமைகின்றது.
4.விண்ணின் ஆற்றல் எது வந்தாலும் ஒளியின் சரீரம் ஆகின்றது
5.அதனால் தான் சப்தரிஷிகள் என்பதைக் கணவன்-மனைவி ஒன்று சேர்த்த நிலைகளாக உணர்த்தினார்கள்.

சாதாரண மனிதனும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நளாயினி சாவித்திரி கதைகளைக் காட்டினார்கள்.

கணவன் மனைவி இரண்டு உடலாக இருந்தாலும் உணர்வுகள் இரண்டறக் கலந்து ஒரு உணர்வாக ஒளியாக மாறுகிறது. இதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து ஒளியின் தன்மை பெறுவதற்கு அக்காலத்தில் இப்படிக் காட்டியிருந்தாலும் இன்று அவரவருக்கு உகந்தபடி “எப்படி எப்படியோ பிரித்து விட்டார்கள்…”

அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்.