ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2022

உடலுக்குப் பின் நாம் செல்ல வேண்டியது எங்கே…?

 

நம்மைப் பாசத்துடன் ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். எனக்கு இவர்தான் உதவி செய்தார் என்று சாகப் போகும் போது எண்ணினால் போதும்.
1.அந்த ஆத்மா வேறு எங்கும் போகாது இவருடன் தொடர்பு கொண்டு இந்த உடலுக்குள் தான் வரும்.
2.வந்த பின் நோய்களைத் தான் அந்த உடலிலும் உருவாக்கும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்து தர்மத்தைச் செய்தால் ஆண்டவன் எனக்குத் தருவான் என்று எண்ணி இருந்தாலும் எல்லோருடைய நிலையையும் எண்ணி எண்ணி எண்ணி வேதனைகளை எடுத்துக் கொண்டு அதனால் நோயாகி இருக்கப்படும் பொழுது யாராவது ஒருவர் எனக்கு உதவி செய்திருந்தால் போதும் அந்த உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே போய்க் குழந்தையாகக் கருவாக்க முடிகிறதா என்றால் இல்லை. நோயைத்தான் உருவாக்கச் செய்யும். அதீதமாக ஆசைப்பட்டு இறந்தவர்களின் ஆன்மாக்கள் தன்னாலே அடுத்த உடலுக்குள் நின்று பேசுவதையும் பார்க்கலாம்... தன் ஆசைகளை அங்கே பிரித்துக் காட்டும்.

மனிதன் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றால் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் பிறக்க முடியும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்போது கெட்டது என்று உணர்ந்தாலும் “ஈஸ்வரா...” என்று நம் உயிரிடமே முறையிட வேண்டும்.
1.புருவ மத்தியியில் குருக்ஷேத்திரப் போராக நடத்தி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சுவாசித்து உள்ளே செலுத்த வேண்டும்
3.இதனுடன் கலந்து உடலின் தன்மை இணைக்கப்படும் போது ஒளியின் தன்மையாகின்றோம்.

அதற்காக வேண்டித்தான்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தச் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்
2.உங்கள் உயிரை ஈசனாக மதித்து இந்த உணர்வின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தியானிக்கின்றேன் (ஞானகுரு)

எனக்கு அது கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். அதே எண்ணத்தின் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன். அந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிந்து அதை நீங்கள் படைக்க வேண்டும்... சப்தரிஷி. சப்தரிஷி… என்றால் நாதம்…!

நாம் ஒரு வாத்தியத்தை இனிமையாக வாசித்தோம் என்றால் நம் தலைகள் எப்படி அசைகின்றது…? ஆனால் அதிலே நாதத்தின் சுருதி குறைவானால் அதை உடனே நாம் வெறுக்கிறோம்.

இதைப்போல நாம் சிருஷ்டிக்கும் அந்த மகிழ்ச்சியின் நிலைகள் ஒளியின் ஈர்ப்பலைகளுக்குள் நாதங்கள் ஆனாலும் நாம் கவர்ந்து சென்று அதே அலைகளிலே நாம் நிற்கின்றோம்.

நாம் அந்த இனிமையின் நிலைகள் கொண்டு உருவாக்கக் கூடிய நிலைகள் ஏழாவது ரிஷி.
1.இந்த உடலுக்குள் நாம் எடுத்துக் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் கெட்டதை நீக்கி நல்லதாக உருவாக்கும் நிலை “ஏழு...” அது தான் ரிஷி
2.நாம் சிருஷ்டிக்கும் தன்மை. “எட்டாவது” உணர்வு ஒளியாக மாறுகின்றது... இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் மகிழ்ச்சி ஊட்டுகின்றது.
3.இந்த உணர்வின் சக்தி உயிருடன் சேர்க்கப்படும் போது “ஒன்பதாவது” ஒளியாக மாறுகின்றது.
4.உடல் எப்படிக் கெட்டதை நீக்குகின்றதோ.. இந்த உடலை விட்டு வெளியே சென்ற பின் இன்னொரு மாடோ ஆடோ மனிதனோ நம்மை இழுத்து விடாது... “பத்தாவது நிலை...!”

அகவே நமக்குள் படைக்க வேண்டியது எது…? கொடுப்பதை நமது உயிர் படைத்துக் கொடுக்கின்றான்...! மகரிஷிகள் சக்தியை ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் உணர்வுகளைப் பொங்கச் செய்ய வேண்டும்.

நம் உடல் விஷத்தை எப்படி மலமாக மாற்றுகிறதோ அது போன்று உயிராத்மா வெளியே வந்தபின் எந்த உடலும் (எந்த விஷமும்) நம்மை இழுத்து விடக் கூடாது… கவர்ந்து விடக்கூடாது.

நாம் செல்ல வேண்டியது எங்கே…?
1.நாம் எந்த மகரிஷியின் தொடர்பைப் பெற்றோமோ... அவருடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று
2.அவர் படைத்த உணர்வின் சத்தாக நமக்கு உடலாக மாற்றிக் கொள்கின்றோம்
3.அது தான் நிலையான சரீரமாகிறது.

அவர்கள் படைத்த உணர்வின் சத்தை நமக்குள் உணவாக மாற்றிக் கொள்கிறோம். அங்கே நிலையான ஒளிச் சரீரமாகி விண்ணிலே எத்தகைய விஷத்தின் ஆற்றல் வந்தாலும் நாம் அதனின் உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.