ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2022

நல்லதைப் பெற வேண்டும் என்று நூறு பேர் வருகிறார்கள் என்றால் அதிலே இரண்டு பேர் தப்புவதற்கே கஷ்டமாக இருக்கிறது

 

எல்லோரும் நல்லவரே...! இருந்தாலும் ஒவ்வொருவரும் சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் உடலிலே அவரை அறியாத நிலைகள் எடுத்துக் கொண்ட உணர்வுகளினால் குடும்பத்திலே எத்தனையோ இன்னல்படுகின்றார்கள்.

உங்களை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நல்ல வாக்கான நிலைகளை உங்கள் உடலில் பதிவு செய்கிறேன் (ஞானகுரு).

அப்படிப் பதிவு செய்தாலும் கூட…
1.இங்கே நூறு பேர் வருகின்றார்கள் என்றால்
2.அதிலே இரண்டு பேர் தப்புவதற்குக் கஷ்டமாக இருக்கின்றது.

யாம் வாக்குக் கொடுத்தோமென்றால்
1.அதன்படி அப்படியே நடக்கட்டும்
2.அந்த அருள் சக்தி எனக்குக் கிடைக்கட்டும்…! என்று எண்ணினால் அது நடக்கும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு இங்கிருந்து போனவுடனே அடுத்தாற்படி அடுத்தவர்கள் கூப்பிட்டுக் கேட்பார்கள். சாமி (ஞானகுரு) என்ன சொல்கின்றார் என்று…?

கேட்டவுடனே… சாமி என்ன சொல்கிறார்...? நன்றாக இருப்பீர்கள் என்று தான் சொல்கின்றார்… ஆனால் என் கஷ்டம் என்ன விட்டுப் போக மாட்டேன் என்கிறதே…! என்பார்கள்.

கஷ்டத்தை எண்ணியவுடன் நல்லதை விட்டுவிடுகின்றார்கள்... வாக்கு கொடுத்ததை விட்டுவிடுகிறார்கள்.

1.சாமி கொடுத்த அருள் வாக்கினால் “எப்படியும் நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்…”
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இப்படிச் சொல்வார்களா... என்றால் “இல்லை…”

எம்மிடமிருந்து செல்லும்போதே சாமி வாக்குக் கொடுக்கின்றார்… நம் காலம் எங்கே ஒட்டி வருகின்றது…? என்று கொடுத்த வாக்கினை நினைவில் நிறுத்தாதபடி செய்து விடுகின்றார்கள்.

ஆனால் இந்த வாக்கினை வித்தாக உங்களுக்குள் கொடுப்பதற்கு நான் (ஞானகுரு) என்ன கஷ்டப்பட்டேன் என்று எனக்குத் தான் தெரியும்.

ஏனென்றால் குருநாதர் கொடுத்த ஞான வித்தை முளைக்க வைத்து அதை விளைய வைத்து மறுபடியும் பல வித்துகளாக உருவாக்கி உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் விளைய வைத்துக் கொண்டால் அருள் ஞானப் பசியைத் தீர்க்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னலைப் போக்கச் செய்யும்.

பசியோடு இருக்கின்றீர்கள்.
1.அந்தப் பசியைத் தீர்ப்பதற்கு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று
2.அந்த நல்ல வித்தினை உங்களுக்குள் பதியச் செய்கிறேன்
3.நீங்கள் முளைக்க வைத்துப் பசியைத் தீர்க்கலாம்.

ஆனால் சரியான நிலையில் முளைக்க வைக்காமல் விட்டு விட்டால் என்ன செய்யும்…? நான் என்ன செய்ய முடியும்…!

நான் அந்த வித்தை உருவாக்குவதற்கு... அந்த வித்தை முளைக்க வைப்பதற்கு… “என்ன பாடுபட்டேன்...” என்று எனக்குத் தான் தெரியும்.

ஆனால் எளிதாகக் கொடுத்தவுடன் இங்கேயே உதறி விட்டுப் போகின்றார்கள். அப்பொழுது என் மனது எப்படியிருக்கும்…!

நான் கொடுத்தேனே… “இப்படிச் செய்துவிட்டார்களே…” என்று உங்களை மாதிரி என்னையும் ஆக்கிவிடுகின்றீர்கள்.

நான்கு பேர் இருக்கும் வீட்டில் குறைபாடு வந்தால் எப்படி இருக்கும்…? ஆனால் என்னிடம் பல ஆயிரக்கணக்கானோர் வருகின்றார்கள். யாம் சொல்லிக் கொடுத்துப் பதிவு செய்த அந்த ஞான வித்தை முளைக்கச் செய்யாது அதைச் சிதற விட்டால் எப்படி இருக்கும்…!

இதைப் போக்குவதற்காக வேண்டி நான் என்ன செய்வது...? கடும் தியானம் இருக்கிறேன்.
1.உங்களை வளர்த்து இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை நினைக்கின்றேன்.
2.ஆண்டவனே… என்று உங்கள் உயிரை நினைக்கின்றேன்
3.ஞானப் பசியைப் போக்கி மகிழ்ச்சியான நிலைகள் அங்கே உருவாக வேண்டும் என்று இரவு முழுவதும் தியானம் இருக்கின்றேன்.

காரணம் என்ன…? என்று கேட்டால் உங்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டவுடன் எனது உயிர் சும்மா இருக்காது.

இப்படி இருக்கின்றார்களே… என்று என்னை நினைக்கச் செய்கிறது,… அறியச் செய்கிறது, அறிந்தவுடனே உள்ளே போய் என் உடலாகின்றது. உயிரின் வேலை அதுவாக இருக்கிறது.

ஆக… குரு கொடுத்த அருள் சக்தி எனக்குள் விளைந்திருந்தாலும் ஆறாவது அறிவின் ஞானம் கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் துன்பங்களைத் துடைப்பதற்குக் குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தார்.
1.அதைத் துடைப்பதிலேயே தான் இருந்து கொண்டிருக்கின்றேன்.
2.உங்களை வளர்ப்பதற்கு முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

ஆகவே நீங்கள் எதைச் செய்தாலும் யாம் கொடுத்த அருள் ஞான வித்தை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும். அருள் ஞானிகளாக வளர வேண்டும்.