ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2022

நீங்கள் ஒவ்வொருவரும் மகரிஷிகளாக உருப்பெற வேண்டும்

 

விண்ணுலக ஆற்றலும்… மண்ணுலக ஆற்றலும்… உயிரின ஆற்றலும்… எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எமக்கு (ஞானகுரு) எடுத்துரைத்தார்.
1.உபதேச வாயிலாக எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
2.அவர் பதியச் செயத உணர்வினை நினைவு கொண்டு நான் எடுக்கப்படும் போது
3.விண்ணின் ஆற்றலைப் பருகும் தன்மைகள் எனக்குள் வந்தது... மண்ணுலக ஆற்றலை அறியும் தன்மையும் வந்தது.

விண்ணுலகம் சென்றடைந்து ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் மண்ணுலகில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள் இங்கே நமக்கு முன் பூமியிலே பரவி உள்ளது.

தீமைகளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றலாகத் தனக்குள் விளைய வைத்த அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் கவர்தல் வேண்டும்.

ஆகவே…
1.மகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் பெறுவோம்... மகிழ்ந்திடும் வாழ்க்கையாக வாழ்வோம்
2.மகிழ்ச்சி பெறும் செயலாகச் செயல்படுத்துவோம்
3.நாம் பார்ப்போரெல்லாம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று மகிழ்ந்து வாழ்வோம்.

பிறர் ஆனந்தமாக வாழ்வதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று அவர்கள் குடும்பம் நலம் பெறுவதை எண்ணி எண்ணி அந்த நலம் பெறும் சக்திகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெறுவோம்.

நாம் பார்ப்போர் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும் உலகம் நலம் பெற வேண்டும் என்று தியானிப்போம் தவமிருப்போம்.

குருநாதர் அனுபவம் பெறுவதற்காக வேண்டி எமக்கு எத்தனையோ இன்னல்களைக் கொடுத்தார். அதை எல்லாம் கடந்து அவர் காட்டிய வழியில் மெய் ஞானத்தை எனக்குள் வளர்க்க முடிந்தது. ஞான வித்துக்களாகப் பெருக்கவும் முடிந்தது.

அந்த நல்ல விதைகளை உங்களுக்குள் விளையச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் நினைவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).
1.நாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற
3,இந்த உயர்ந்த எண்ணத்தை வளர்ப்பதற்காக மகரிஷிகளின் சக்திகளை அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்கிறோம்.

இந்தப் பூமி முழுவதும் சுற்றப்பட்டு அந்த அருள் ஞான வித்துக்கள் அழிந்திடாதபடி உங்களுக்குள் அதை விளையச் செய்ய ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானத்திலும் பௌர்ணமி தியானத்திலும் இதை உணர்த்திக் கொண்டே வந்திருக்கின்றோம்.

தீமைகளை அகற்றக்கூடிய வாக்காகக் கொடுத்து அதன் வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யும் பொழுது ஏற்றுக் கொள்வார் எத்தனை பேர் இருக்கிறார்கள்...?

அது போன்று ஆகாதபடி…
1.அருள் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி அது ஓங்கி வளர்ந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் உருப்பெற வேண்டுமென்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.