ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2022

அருள் சேவை

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் அனைவரும் ஐக்கிய உணர்வாக எண்ணி அந்த மெய் உணர்வின் சத்தைப் பெற வேண்டும்.

குருநாதர் ஏனோ… எதற்கோ.. எதுவோ சொன்னார்…! என்ற நிலைகள் வேண்டாம்.
1.இவ்வழியை எவர் ஒருவர் சீராகப் பெறுகின்றாரோ… நீ பெறச் செய்கின்றாயோ…
2.அங்கே நீ என்னைக் காணலாம்…! என்று தான் எனக்கு (ஞானகுரு) ஒரு கட்டளை இட்டார் .

ஆகையினால் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியை அவர் எனக்கு உபதேசித்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து… பெறச் செய்து… பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.

எந்த அளவிற்கு இதை நீங்கள் ஏங்கிப் பெற்று வளர்த்துக் கொள்கின்றீர்களோ…
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை எங்களால் நீக்க முடிந்தது…
2.எங்கள் சொல்லால் பிறருடைய தீமைகளும் அகன்றதைத் பார்க்கின்றோம் என்று எப்பொழுது சொல்கின்றீர்களோ
3.அங்கே குருநாரை உங்கள் ரூபமாகப் பார்க்கின்றேன்.

எத்தகைய தீமை உள்ளவர்களைப் பார்த்தாலும்
1.நாங்கள் பார்த்த பின் தீமைகள் அங்கே அகன்றது.
2.எங்கள் நினைவாற்றலால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கியது.
3.எங்கள் பார்வையால் தொழிலும் விவசாயமும் செழித்தது என்று
4.இதைப் படித்துணர்ந்தோர் உணர்வுகளில் இதைப் பெறும்படி நீ செய்ய வேண்டும் என்று தான் குருநாதர் சொன்னார்.

ஆகவே நீங்கள் எல்லோரும் அந்தத் தகுதி பெற வேண்டும் என்று உங்களைத் தான் நான் தியானிக்கின்றேன் .
1.உங்கள் உயிரைத் தான் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உணர்வைத்தான் தெய்வமாக எண்ணுகின்றேன்.
3.உங்கள் உடலைத் தான் சிவமென்று மதிக்கின்றேன்
4.உங்களுக்கு வழி காட்டும் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.உங்கள் உடலுக்குள் சர்வத்தையும் கவர்ந்து வளர்த்திடும் சக்தியை மகா லட்சுமியாக மதிக்கின்றேன்.
6.உங்களுக்குள் சர்வத்தையும் அறிந்திடச் செய்யும் சக்திகளை மகா சரஸ்வதி என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் காணுகின்றேன்.

இந்த உபதேசத்தைப் படித்துணர்ந்த நீங்கள் ஞானிகளின் உணர்வை எங்களுக்குள் வளர்த்துக் கொண்டோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றோம்… எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் எல்லோருக்கும் நல்லதானது…! என்று நீங்கள் அனுபவபூர்வமாகச் சொன்னீர்கள் என்றால் அங்கே ஈஸ்வராய குருதேவரை நான் காணுகின்றேன்.

மனிதனாக இருக்கும் நாம் அனைவருமே படைத்திடும் ஆற்றல் பெற்றவர்கள். நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்தி இந்த விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நாம் மீளவேண்டும்… மற்ற மக்களையும் காக்க வேண்டும்…!