ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2022

மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை

 

ஆதியிலே ஆவியாக இருந்தது அணுத் தன்மை அடைந்தது. பல அணுக்கள் ஒன்றாக இணைந்து கோள் என்ற நிலை அடைகின்றது. கோள் என்ற நிலை அடையும் பொழுது அதனின் வளர்ச்சியில் நட்சத்திரமாக மாறுகின்றது.

நட்சத்திரமாக ஆனபின் தன் மலத்தால் (பால்வெளி மண்டலம்) பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெறுகின்றது... உணர்வின் இயக்கமாக மாறுகின்றது. ஒரு அமிலத்தின் தன்மையாக மாற்றி அமைக்கும் சக்தி பெறுகின்றது.

பின்... பிற மண்டலங்களின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து அந்த நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது. சூரியன் ஆகும் போது தனது வளர்ச்சியில் அதன் வளர்ப்பில் ஓர் பிரபஞ்சம் என்ற நிலையை உருவாக்குகின்றது.

பிரபஞ்சம் என்று உருவான பின் அதில் சேர்க்கும் உணர்வின் தன்மை நட்சத்திரங்களின் இயக்கமாக ஒரு உயிரணு என்று உருவாகின்றது. அந்த உயிரணுவோ தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றுகின்றது.

தாவர இனங்கள் உணர்வின் தன்மையை இந்த உணர்வுக்கொப்ப அந்தச் செடியின் ரூபமும் மணமும் அதன் இயக்கமும் என்ற நிலையை அடைகின்றது.

இதைப் போன்று பல நிலைகளைக் கவர்ந்து கொண்ட நிலைக்கொப்ப
வண்ணங்கள் மாறுகின்றது...
சுவைகள் மாறுகின்றது...
குணங்கள் மாறுகின்றது...
உணர்ச்சிகள் மாறுகின்றது.

1.ஆக... கோளாக இருப்பது இருண்ட நிலையிலிருந்து வேகும் நிலைகள் கொண்டு நட்சத்திரமாக எப்படி ஆனதோ
2.இதைப்போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும்
3.இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் நட்சத்திரமாக என்று மாற்றுகின்றோமோ
4.அதுவே மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை.

சூரியன் எவ்வாறு ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல உயிரின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

இதை எல்லாம் முழுமையாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவன் திருமணமான பின்
1.தான் கண்ட பேருண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குப் போதிக்கின்றான்
2.மனைவியும் கணவருடன் ஒன்றி ஒத்துழைக்கின்றது...
3.இருவரும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றன இணைந்து உணர்வின் தன்மை ஒளியாகி ஒளியின் சரீரமாகத் தனக்குள் படைத்து
4.எந்தத் துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகர்ந்தனரோ அதையே எல்லையாக வைத்து
5.பூமி கவரும் உணர்வினை ஒளியாக மாற்றி கொண்டுள்ளார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை அகற்றிய அத்தகைய அருள் ஞானியின் உணர்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவுகின்றது. நமது பூமி துருவப் பகுதி வழியாக அதைக் கவர்கின்றது.

துருவத்தின் வழி பூமிக்குள் வருவதை
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட உண்மை போல அவன் கண்டறிந்த உண்மையை
2.நமது குருவும் கண்டுணர்ந்தார்... அதனை நுகர்ந்தார்
3.நுகர்ந்ததைத் தனக்குள் விளைய வைத்தார்... அருள் உணர்வினை வெளிப்படுத்தினார்
4.எம்மை நுகரும்படி செய்தார்... அவர் கண்ட அந்த உண்மையின் உணர்வை யாமும் அறிய முடிகின்றது.

அறிந்த உணர்வை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். பதிந்த உணர்வினை நீங்கள் உங்களுக்குள் உருவாக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தி பெற முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்.