ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2022

இந்த மனித வாழ்க்கை மாய வாழ்வாக இருக்கின்றது… நீ எதைக் காணப் போகிறாய்…? என்று கேட்டார் குருநாதர்

 

1.நோய் எல்லாம் போய்விடும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று யாம் (ஞானகுரு) சொன்னால் எங்கெங்கே…? என்று அதைத்தான் திருப்பிக் கேட்கிறார்கள்.

2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது... என்று சொல்வார்கள். “அது எல்லாம் நீங்கிப் போய்விடும்… நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்...” என்று யாம் சொல்வோம்.
3.நீங்கள் சொல்கிறீர்கள்... என் பையன் எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான்...! என்று சொல்லி
4.யாம் கொடுக்கும் வாக்கினை அப்பொழுதே அதை ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றார்கள்.

எவ்வளவோ சிரமப்பட்டுத் “தந்திரமாக...” உங்கள் உடலிலே அருள் உணர்வைப் பாய்ச்சி... அருள் ஞான வித்தை உங்களுக்குள் தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி செய்கிறோம்.

ஆனால் விளை நிலத்தில் விதைத்த விதைகளை எறும்புகள் எடுத்துச் சென்று எப்படி முளைக்காமல் செய்து விடுகின்றதோ... அதைப் போல்
1.உங்கள் உடலில் ஏற்கனவே பதிந்த சாப அலைகள் நின்று
2.யாம் கொடுக்கும் உபதேச உணர்வுகளை ஆழமாகப் பதிய விடாதபடி அது தடுத்து விடுகிறது.

எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். பின் ஊருக்குப் போய் வருகிறேன் என்பார்கள். ஆனால் அடுத்த கணம் என்னுடைய கஷ்டம் இப்படியெல்லாம் இருந்து கொண்டே இருக்கிறதே என்று திருப்பி
1.நான் கொடுத்த வாக்குகளை விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்
2.நான் கொடுத்த அருள் வாக்கை இங்கேயே விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் வாங்கிச் செல்கின்றார்கள்.

காரணம் இந்த சாப அலைகளே இதற்கு மூலம் ஆகின்றது. அவருடைய குறை அல்ல. ஆகவே நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை.

முந்தைய நிலையில் உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் உங்களை அறியாது எப்படி எல்லாம் இயக்குகின்றது…? அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் வீட்டில் ஒருவர் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படிச் செல்கின்றது…? நன்றாக இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்கின்றீர்கள். ஆனால் அவரால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் மனது அது எப்படி ஆகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் எண்ணிலடங்காத பேர் என்னிடம் வாக்கினை வாங்கிச் செல்கிறார்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று குருநாதர் கொடுத்த நிலைகளை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

என்னை எத்தனையோ ஆபத்தான நிலையில் எல்லாம் குருநாதர் சிக்க வைத்தார். ஒவ்வொரு நொடியிலும் அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது…? நீ எப்படி இருக்க வேண்டும்…? என்று
1.மூன்று லட்சம் பேரின் குடும்ப நிலைகளைக் காட்டி
2.மனித உடலிலே மாய வாழ்வாகத் தான் இருக்கின்றது
3.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…? என்றார்

என்றும் நிலையான நிலைகளில் இருக்கும் மகரிஷிகளின் எல்லையை நீ எப்படி அடைய வேண்டும்...? என்று .தெளிவாகச் சொன்னார். இதை எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டுகின்றார்.

நம்முடைய கடைசி எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான். அவர்கள் ஒளிச் சரீரம் பெற்று வாழும் சப்தரிஷி மண்டல எல்லையில் தான் நாம் இருக்க வேண்டும்.. அதைத் தான் பின்பற்ற வேண்டும்...! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.