ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2020

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…!

நம்மைத் திட்டியவரை நினைத்தால் நாம் கணக்குகள் பார்த்துக் கொண்டிருந்தால் அது தப்பாகும். வேறு எந்த வேலை செய்தாலும் நம்மால் அதைச் சீராகச் செய்ய முடியாது.
 
அந்தத் திட்டியவனை எண்ணி… நமக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று அவனை எண்ணும் போது அவனுக்குள்ளும் இது சென்று அவன் காரியங்களுக்கும் இடைஞ்சலாகும்.
 
அதே போல் ஒரு வேதனைப்படுவோரை நாம் நுகர்ந்தால் அது ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது. நமக்கும் அதே வேதனை வருகிறது.
 
ஆனால் இது போன்ற தீய வினைகளை எல்லாம் வேக வைத்து விட்டால் முளைக்காது.
 
பண்புடன் பரிவுடன் தான் அந்த வேதனைப்படுவோரிடம் கேட்டறிகின்றோம். அவனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்கின்றோம்.
 
ஆனால் உதவி செய்தாலும்… ஈஸ்வரா… என்று உயிரை வேண்டி நம் நினைவுகள் அனைத்தும் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
1.இவ்வாறு புருவ மத்தியில் தடைப்படுத்திய பின்
2.அந்த வேதனைப்பட்ட உணர்வு நமக்குள் புகாது தடைப்படுகின்றது.
 
அங்கே நிறுத்திய பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
 
கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது…
1.அந்த வேதனை உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி
2.துருவ நட்சத்த்திரத்தின் உணர்வு வலு பெற்ற பின் தடுக்கப்படுகின்றது.
3.அப்பொழுது நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.
 
பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வேதனைப்படுவோர் உடல் முழுவதும் படர வேண்டும். அந்த வேதனையிலிருந்து அவர் மீண்டு சிந்தித்துச் செயல்படும் திறன் பெற்று பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வை நாம் எண்ணி அதை அவர் மேல் பாய்ச்சுதல் வேண்டும்.
 
அப்பொழுது அவர் உடலில் உள்ள வேதனைகளை மாற்றிட இந்த உணர்வை எடுத்துக் கொண்டால் பரவாயில்லை.
 
மகரிஷிகளின் அருள் சக்தியால் “நீ உடல் நலம் பெறுவாய்…!” என்று நாம் சொல்லும் உணர்வுகள்
1.அவர் செவிகளில் மோதி அந்த உணர்வுகள் அங்கே பாயும் போது சிறிதளவாவது பாயும்.
2.அதே சமயத்தில் அவரின் வேதனையான உணர்வுகளை நமக்குள் வராதபடி தடுத்து விடுகின்றோம்.
 
துருவ நட்சத்திரம் என்பதை “சுக்ரீவன்” என்று காரணப் பெயர் வைத்துள்ளனர்.
 
பல கோடிச் சரீரங்களைக் கடந்த அகஸ்தியன்… கணவன் மனைவி என்று இரு உணர்வுகளையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சுக்ரீவன்.
 
சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…! ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்த பின் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற ஏங்கினால் அந்தத் தீயது உடலுக்குள் போகாதபடி தடுக்கின்றது.

அந்த உணர்வின் தன்மை நம் உடலில் பெருக்கிய பின் அந்தத் தீமை என்ற உணர்வுகளைத் தள்ளிவிடுகின்றது. நாம் உடல் நலம் மன நலம் பெறுகின்றோம். மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெறுகின்றோம்.